» வல்லின எழுத்துகள் மிகா இடங்கள்

வல்லின எழுத்துகளாகிய க், ச், த், ப் என்பன மிகா இடங்கள் எவை என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் காண்போம்

௧)

‘அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு’ - என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகாது.

அவ்வளவு + பெரிது = அவ்வளவுபெரிது
இவ்வளவு + கனிவா = இவ்வளவு கனிவா?
எவ்வளவு + தொலைவு = எவ்வளவு தொலைவு?

௨)

‘அத்தனை, இத்தனை, எத்தனை’ - என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகாது.

அத்தனை + புத்தகங்களா = அத்தனை புத்தகங்களா?
இத்தனை + தொழில்களா = இத்தனை தொழில்களா?
எத்தனை + கருவிகள் = எத்தனை கருவிகள்?

௮)

‘அஃறிணைப் பன்மை’ முன்வரும் வல்லினம் மிகாது.

பல + பசு = பல பசு
சில + கலை = சில கலை
அவை + தவித்தன = அவை தவித்தன

௩)

வினாப் பொருள் உணர்த்தும் ஆ, ஓ, ஏ என்னும் வினா எழுத்துகளின் பின்வரும் வல்லினம் மிகாது.

அவனா + கேட்டான் = அவனா கேட்டான்?
அவளா + சொன்னாள் = அவளா சொன்னாள்?
யாரே + கண்டார் = யாரே கண்டார்?

௭)

வியங்கோள் வினைமுற்றுகளின் பின் வல்லினம் மிகாது.

கற்க + கசடற = கற்க கசடற
வெல்க + தமிழ் = வெல்க தமிழ்
வீழ்க + தண்புனல் = வீழ்க தண்புனல்

௪)

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் தவிர, மற்றப் பெயரெச்சங்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகாது.

பெரிய + பெண் = பெரிய பெண்
கற்ற + சிறுவன் = கற்ற சிறுவன்
நில்லாத + செல்வம் = நில்லாத செல்வம்
அழியாத + கல்வி = அழியாத கல்வி

௫)

‘எட்டு, பத்து’ ஆகியவை தவிர மற்ற எண்ணுப்பெயர்களின் பின்வரும் வல்லினம் மிகாது.

ஒன்று + கேள் = ஒன்று கேள்
ஒரு + பொருள் = ஒரு பொருள்
இரண்டு + புத்தகம் = இரண்டு புத்தகம்
இரு + பறவை = இரு பறவை
மூன்று + குறிக்கோள் = மூன்று குறிக்கோள்
நான்கு + பேர் = நான்கு பேர்
ஐந்து + கதைகள் = ஐந்து கதைகள்
ஆறு + கோவில் = ஆறு கோவில்
அறு (ஆறு) + சீர் = அறுசீர்
ஏழு + சான்றுகள் = ஏழு சான்றுகள்
ஏழு + பிறப்பு = எழு பிறப்பு
ஒன்பது + சுவைகள் = ஒன்பது சுவைகள்

௬)

‘இரட்டைக் கிளவியிலும், அடுக்குத் தொடரிலும்’ வல்லினம் மிகாது.
கல + கல = கலகல
சட + சட = சடசட - இரட்டைக் கிளவிகள்

பள + பள = பளபள
தீ + தீ = தீதீ
பார் + பார் = பார்பார் ! - அடுக்குத்தொடர்கள்

௯)

‘ஏவல் வினை’ முன் வரும் வல்லினம் மிகாது.

வா + கலையரசி = வா கலையரசி
எழு + தம்பி = எழு தம்பி
போ + செல்வி = போ செல்வி
பார் + பொண்ணே = பார் பெண்ணே !

௰)

‘மூன்றாம் வேற்றுமை உருபுகளாகிய ஒடு, ஓடு’ ஆகியவற்றின் பின் வல்லினம் மிகாது.

கோவலனொடு + கண்ணகி வந்தாள் = கோவனொடு கண்ணகி வந்தாள்.

துணிவோடு + செல்க = துணிவோடு செல்க.

அண்ணனோடு + தங்கை வந்தாள் = அண்ணனோடு தங்கை வந்தாள்

௰௧)

‘செய்யிய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் வரும் வல்லினம் மிகாது.

காணிய + சென்றேன் = காணிய சென்றேன்
உண்ணிய + சென்றாள் = உண்ணிய சென்றாள்

௰௨)

“பொதுப் பெயர், உயர்திணைப் பெயர்களுக்குப்” பின்வரும் வல்லினம் மிகாது.

தாய் + கண்டாள் = தாய் கண்டாள்.
கண்ணகி + சீறினாள் = கண்ணகி சீறினாள்.

௰௩)

‘ஐந்தாம் வேற்றுமையின் சொல் உருபுகளான இருந்து, நின்று’ என்பவைகளின் பின் வரும் வல்லினம் மிகாது.

மாடியிலிருந்து + கண்டேன் = மாடியிலிருந்து கண்டேன்.
மரத்திலிருந்து + பறித்தேன் = மரத்திலிருந்து பறித்தேன்.
மலையினின்று + சரிந்தது = மலையினின்று சரிந்தது

௰௪)

“வினைத் தொகையில்” வல்லினம் மிகாது.

விரி + சுடர் = விரிசுடர்
பாய் + புலி = பாய்புலி

௰௫)

“உம்மைத் தொகையில்” வல்லினம் மிகாது.

காய் + கனி = காய்கனி
தாய் + தந்தை = தாய்தந்தை

௰௬)

‘அது, இது’ என்னும் சட்டுகளின் பின் வல்லினம் மிகாது.

அது + பறந்தது = அது பறந்தது.
இது + கடித்தது = இது கடித்தது.

௰௭)

எது, யாது என்னும் வினாச்சொற்களின் பின் வல்லினம் மிகாது.

எது + பறந்தது = எது பறந்தது?
யாது + தந்தார் = யாது தந்தார்?

௰௮)

‘விளித் தொடரில்’ வல்லினம் மிகாது.

கண்ணா + பாடு = கண்ணா பாடு.
அண்ணா + கேள் = அண்ணா கேள் !

௰௯)

வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் ‘கள், தல்’ என்னும் விகுதிகள் வரும் பொழுது வல்லினம் மிகாது.

எழுத்து + கள் = எழுத்துகள்
கருத்து + கள் = கருத்துகள்
வாழ்த்து + கள் = வாழ்த்துகள்
போற்று + தல் = போற்றுதல்
நொறுக்கு + தல் = நொறுக்குதல்

௨௰)

‘இரண்டு வட சொற்கள்’ சேரும் பொழுது வல்லினம் மிகாது.

கோஷ்டி + கானம் = கோஷ்டி கானம்
சங்கீத + சபா = சங்கீத சபா

Advertisement