» நல்ல மனைவி

ஆசிரியர் : கவிஞர் கண்ணதாசன்.
௰௨)

மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிதானத்தையும் எச்சரிக்கையையும் இந்துமதம் வலியுறுத்துகிறது.

‘அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே’ என்பது இந்துக்களின் எச்சரிக்கைப்பழமொழி.

இளம் பருவத்தின் ரத்தத்துடிப்பு வெறும் உணர்ச்சிகளையே அடித்தளமாக்க்கொண்டது.

அந்தப் பருவத்தில் காதலும் தோன்றும்; காம்மும் தோன்றும்.

ஒருபெண்ணிடம் புனிதமான காதல் தோன்றிவிட்டால், உடல் இச்சை உடனடியாக எழாது.

அவளைப்பார்க்க வேண்டும். பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். பேச வேண்டும். பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை வளரும்.

அவளைக்காணாத நேரமெல்லாம் கவலைப்படும்.

கனவு காணும்.

கற்பனை செய்யும்.

மிகவும் சிறு பருவத்தில் மட்டுமே அத்தகைய புனிதக் காதல் தோன்றும்.

அது நிறைவேறி, வாழ்க்கை வெற்றிகரமாக நடப்பதும் உண்டு; நிறைவேறாமல் தலையணையைக் கண்ணீரால் நனைப்பதும் உண்டு. நிறைவேறிய பிறகு கூட்டுறவில் தோல்வி ஏற்படுவதும் உண்டு.

ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும்போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்தக் காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே!

உடல் இச்சையால் உந்தித்தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறிவிடுகிறான்.

எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்குப் பிடிக்கிறது.

அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான்.

பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவனுக்கு வந்து சேருகிறாள்.

பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனுடைய பார்வை லயித்துவிட்டால், அந்தச் சரீரத்துள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போகிறது.

ஆனால் ஆத்மாவின் ராகம் கண்களை மட்டும் கவனிக்கிறது.

அந்தக் கருநீலக் கண்களை மட்டும் கவனிக்கிறது.

அந்தக்கருநீலக் கண்கள் அவனைப் பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனித்த் தன்மை வெளியாகிறது.

அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.

புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள் உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள்.

எதிர்காலக்குடும்ப நிம்மதியையும் ஆனந்தத்தையும் நாடும் இளைஞன், எத்தகைய பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு வடமொழியில் ஒரு சுலோகம் உண்டு.

கார்யேஷூதாசி
கரணேஷூ மந்திரி
ரூபேஷூ லட்சுமி
க்ஷமவா தரித்ரி
போத்யேஷூ மாதா
சயனேஸூ வேஸ்யா
சமதர்ம யுக்தா
குலதர்ம்பத்தினி

-சேவை செய்வதில் தாசியைப் போலவும்,
யோசனை சொல்லுவதில் மந்திரியைப்போலவும்,
அழகில் லட்சுமியைப் போலவும்,
மன்னிப்பதில் பூமாதேவியைப்போலவும்,
அன்போடு ஊட்டுவதில் அன்னையைப் போலவும்,
மஞ்சத்தில் கணிகையைப் போலவும்,
நடந்து கொள்ளக்கூடிய ஒருத்தியே குலதர்ம பத்தினி என்கிறது அந்த சுலோகம்.

கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி’ என்று பழமொழிக்கேபக்கணவனுக்கு என்னென்ன நேரங்களில் என்னென்ன தேவை என்பதை வீட்டுகு வந்த சில நாள்களிலேயே கண்டு கொண்டு, அந்தக் கடமைகளைச் செய்வதில் அவள் அடிமைபோல் இயங்க வேண்டும். (வடமொழியில் தாசி என்றால் அடிமை)

அவள் கல்வியறிவுளவளாய், இக்கட்டான நேரங்களில் நல்ல யோசனை சொல்பவளாய், ஒரு மந்திரியைப் போல இயங்க வேண்டும்.

‘பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள்.’ என்கிறார்களே, அந்தமகாலட்சுமியைப் போன்ற திருத்தமான அழகு இருக்க வேண்டும்.

அழகு, என்றால் முடியை ஆறு அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, முக்கால் முதுகுபின்னால் வருவோருக்குத் தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும்பார்வைக்கு வைக்கும் நாகரிக அழகல்ல;

காஞ்சிபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிகை போட்டு, ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துகு மஞ்சள் பூசி, குங்கும்ப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழைகையே, ‘மாகலட்சுமி போன்ற அழகு’ என்றார்கள்.

அவள் பார்க்கும்போதுகூட நேருக்குநேர் பார்க்கமாட்டாள்.

“யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்”

- என்றான் வள்ளுவன்.

ஒரு கண் சிற்க்கணித்தாள் போல நகும்’ என்பதும் அவளே.

எந்த ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீரென்ற அதிர்ச்சியைத் தருமென்றால் மகாலட்சுமி மோற் குலப்பெண்கள், அந்த அதிர்ச்சிக்குப் பலியாகி விடுவதில்லை.

இடி தாங்கிக் கருவி, இடியை இழுத்துக் கிணற்றுக்குள் விட்டுவிடுவது போல் அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவர்கள் விரட்டி விடுகிறார்கள்.

ரூபத்தில் மகாலட்சுமி, என்று சொல்லுகிற சுலோகம், அப்படிப்ட்ட ரூபத்திலுள்ள இதயத்தையும் மகாலட்சுஇயின் இதயமாகவே காட்டுகிறது.

பொறுத்தருள்வதில் அவள் பூமாதேவியைப் போல் இருக்க வேண்டும்.

கணவனது சினத்தைத் தணிக்கும் கருவியாக இருக்க வேண்டும்.

அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.

நல்ல குலப் பெண்களால் அது முடியும். அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில், அவள் தாய்போல் இருக்க வேண்டும்.

‘தாயோடு அறுசுவைபோம்’ என்பது, நம் முன்னோர் மொழி.

பள்ளி அறையில் அவள் கணிகையைப் போலவே நடந்துகொள்ள வேண்டும். கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்தும் உள்ளவளாய் இருக்க வேண்டும்.

மீண்டும் அவளையே பார்க்க வேண்டும். என்ற ஆசை கணவனுக்கு எழ வேண்டும்.
-அப்படிப்ட்ட ஒருபெண்ணைத் தன்பத்தினியாக ஏற்றுக்கொண்டவன், பெரும்பாலும் கெட்டுப் போவதும் இல்லை. வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை.

நல்ல பெண்ணை மணந்தவன்,முட்டாளாய் இருந்தாலும், அறிஞனாகிவிடுகிறான். அவன் முகம் எப்பொழுதும் பிரகாசமாயிருக்கிறது.

தவறான பெண்ணை அடைந்தவன், அறிஞனானாலும் முட்டாளாகி விடுகிறான். அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது.

எல்லாம் சரி. அத்தகைய நல்ல பெண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?

அதற்குப் பாண்டிய நாட்டு இந்துக்களிடையே ஒருபழமொழி உண்டு.

‘தாயைப் பார்த்துப்பெண்ணெடு
தரத்தைப்பார்த்து வரவிடு
நிலத்தைப் பார்த்து பயிரிடு
நேரம் பார்த்து முடிவெடு’
- என்பார்கள்.

“தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால்,
மளைப் படிக்கட்டில் பார்க்க வேண்டாம்” என்பார்கள்.

“தாயைப் போலபிள்ளை நூலைப்போல சேலை” என்பார்கள்.

தாயின் குணங்கள் பெண்ணுக்கும், தந்தையின் குணங்கள் பிள்ளைக்கும் படிவதாக ஐதீகம்.

அப்படிப் படியாமலும் போவதுண்டு; அது விதி விலக்கு.

ஆகவே, தாயைப் பற்றித் தெரிந்து கொண்டால்,பெண்ணைப்பார்க்க வேண்டியதில்லை.

இளைஞரின் துடிதுடிப்பு தாயைப்பற்றிக் கேள்வி கேட்பதில்லை. பெண்ணின் வாலிப்பான அங்கங்களே அவன்நினைவை மயக்குகின்றன.

அதனால்தான் ‘பெற்றோர் பார்த்து மகனுக்குப்பெண் தேட வேண்டும்’ என்கிறார்கள்.

பெற்றவர்கள் பெண் பார்க்கும்போது, பெண்ணின் குலம் கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தபிறகுதான், பேசி முடிக்கிறார்கள்.

அத்தகைய திருமணங்ள் - நிதானமாக அறிந்து முடிக்கப்ட்ட திருமணங்கள். நூற்றுக்குத்தொண்ணூறு வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.

ஆத்திரத்தில் காதல்
அவசரத்தில் கல்யாணம்
-என்று முடிந்த திருமணங்கள். நூற்றுக்குத் தொண்ணூறு தோல்வியே அடைந்திருக்கின்றன.

ஆகவே, ஆயுள்காலக் குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டுமென்றால், பெணகள் தேடும் பொறுப்பை பெற்றோர்களிடமே விட்டுவிட வேண்டும்.

காவியத்துக்குச் சுவையான காதல் வாழ்க்கை, பல பேருக்கு நேர்மாறான பலனையே தந்திருக்கின்றது. (விதி விலக்குகளை இதில் நான் சேர்க்கவில்லை)

குடிப்பிறப்புப் பார்த்துதான பெண்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை மழுவதும் அமைதி இழந்து, அவமானம் சுமந்து, அழுது நொந்து சாக வேண்டியிருக்கும்.

‘குடிப்பிறப்பு’ என்பது ஜாதியைக் குறிப்பதல்ல; பெண் பிறந்த குடும்பத்தையே குறிப்பது.

எந்த ஜாதியிலும் நல்லபெண்கள் தோன்றுகிறார்கள்; கெட்ட பெண்களும் இருக்கிறார்கள்.

நல்ல பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் ஜாதி- மதம் -பார்ப்பது பயன்ற்றது.

குடிப்பிறப்புத்தான் இன்றியமையாத்து.

இலங்கையில் சீதையைக் கண்டு திரும்பிய அநுமன், இராமனிடம் இப்படிச் சொல்கிறான்.

“விற்பெரும் தடந்தோள் வீர
வீங்குநீர் இலங்கை வெற்பின்
நற்பெரும் தவத்த ளாய
நங்கையைக் கொண்டே னில்லை;
இற்பிறப் பென்ப தொன்றும்
இரும்பொறை என்ப தொன்றும்
கற்பெனும் பெயர தொன்றும்
களிநடம் புரியக் கண்டேன்!”

“ஆரியப் புத்ரா! நான் இலங்கையின் சீதை என்னும் நங்கையைக் காணவில்லை.

“குடிப்பிறப்பு என்ற ஒற்றுமையும், சிறந்த பொறுமை எனும் ஒன்றையும், கற்பு எனும் ஒன்றையும் கண்டேன்” என்கிறான்.

“நலத்தின் கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப்படும்”

என்றான் வள்ளுவன்.

“நடத்தையின் குற்றம் குலத்தின் குற்றமே” என்பது வள்ளுவன் வாதம்.

ஆகவே, ஒரு பெண்ணின் குடிப்பிறப்பைக்கூர்ந்து அறிதல் இன்றியமையாத்து.

நற்குடிப் பிறப்பை அறிந்துகொண்டு விட்டால், பிறகு பெண்ணின் உருவத்தை மட்டும் பார்த்தால்போதும் மற்ற குணங்கள் தாய் வழியே வந்திருக்கும்.

பொறுப்பற்ற இளைஞன், குடும்ப몮பொறுப்பை மேற்கொண்ட பிறகு, அந்த ரதம் நீண்ட தூரம் செல்ல வேண்டிய ரதம் என்பதை அறிந்தால், இதில் எச்சரிக்கையாக இருப்பான்.

நல்ல துணை கிடைக்காமல், பைத்தியக்கார்ரைப் போல் உலவும் துர்பாக்கியசாலிகளின் கண்ணீரில் இருந்து, பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் பாடத்தை இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

“பத்தாவுக்கேற்ற பதிவிரதை யாமானால்
எத்தாலும் கூடி வாழலாம் - சற்றேனும்
ஏறுமாறாக இருப்பாளே யாமாயின்
கூறாமற் சந்தியாசம் கொள்!”

“சண்டாளி சூர்ப்பநகை தாடகையைப்போல்வடிவு
கொண்டாளைப்பெண்ணென்று கொண்டாயே தொண்டா
செருப்படித்தான் உந்தன் செல்வமென்ன செல்வம்
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்!”

-என்றான் தமிழ் மூதாட்டி.

“கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையை
எடுத்(து)
அப்புறம் தன்னில் அசையாமல் முன்வந்(து)
அயல்வளைவில்
ஒப்புடன் சென்று துயில்நீத்துப் பின்வந்(து)
உறங்குவாளை
எப்படி நான் நம்புவேன், இறைவா
கச்சி ஏகம்பனே!”

என்று புலம்பினார் பட்டினத்தார்.

சித்தர்கள், ரிஷிகள், சந்நியாசிகள் பலர் மனைவியால் விரக்தியுற்ற அப்படி ஆனவர்கள் என்பதால்தான் ந்தி மூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாது என்கிறார்கள்.

“இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாறே ஆமாயின் -இல்லால்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்”

இதுவும் மூத்தோர் மொழி.

இல்லாள் என்பவள் இல்லத்தை ஆள்பவள்; அவள் அன்பில்லாளாக, அடக்கமிலாளாக பணமில்லாளாக, பத்தினித்தன்மை இல்லாளாக இருந்துவிட்டால், உன் வீடு புலி கிடந்த குகைபோல் ஆகிவிடும்” என்பது முன்னோரு எச்சரிக்கை!

இந்துப் புராணங்களில் ஈடுபாடு கொண்டவர்கள்,நல்ல மனைவியின் இலக்கணங்களை அறிவார்கள்.

இன்றைய இளைஞனுக்கும் மத ஈடுபாடு ஏற்பட்டு விட்டால், அவன் கண்ணை மனது வென்று, நல்ல பெண்ணை நோக்கிக் கொண்டு போகும்

Advertisement