» வீரனா? பித்தனா?

ஆசிரியர் : சாண்டில்யன்.

செண்பக மலரைக் குழலில் சூடி இடை ஒடித்து, சீற்றம் நிரம்பிய கருவிழிகளை கனல் விழிகளாக்கி தன்னை சிறை செய்யும்படி ஆணையிட்ட அந்த சித்தினியின் உத்தரவைவே அதை அடுத்து தன்னை நோக்கி வாளும் கையுமாக வந்த பத்து வீரர்களையோ சிறிதளவும் லட்சியம் செய்யாமலும், கையிலேந்திய சிலைலையோ, அத்துடன் இணைந்து நின்ற பாம்புரத்தமும் புற்று மண்ணும் ஒட்டிய சிலையும் அந்த அழகியையும் மாறிமாறி நோக்கினான் சில வினாடிகள்.

அப்படி அவன் அசட்டையுடன் காலதாமதம் செய்ததால் அவனை நெருங்கிவிட்ட பத்துக்காவலரும் தங்கள் வாட்கள் நுனிகள் அவன்உடலில் படும் படி செய்துங்கூட அவன் நின்ற நிலையிலிருந்து அகலாமல் சிலையிலிருந்து தனது குறுவாளை வலது கையால் எடுத்து பாம்பு ரத்தத்தையும் புற்று மண்ணையும் தனது கச்சையில் துடைத்துக்கொண்டன் நிதானமாக. துடைத்த குறுவாளைக்கச்சையில் வயிற்றுக்கு மேலிருந்த உறையில் செருகிவிட்டு இடது கையிலிருந்த தந்தச்சிலை மீது படிந்திருந் மண்ணையும் வலது கைகளாலும் அதை ஏந்தி அதன் வேலைப்பாட்டையும் அழகையும் கவனிக்கலானான்.

அவன் தங்களைப்பற்றிகாட்டிய அசட்டையும், சிலையை சுத்தப்படுத்துவதில் கட்டிய சிரத்தையையும் கவனித்த பத்து காவலனில் தலைவனாகக் காணப்பட்ட ஒருவன் “ டேய்! பத்து வாட்கள் உன்னை தடவி நிற்கின்றன” என்று அறிவித்தான் சினம் ததும்பிய குரலில்.

கையிலிருந்த சிலையிலிருந்து கண்ணை எடுக்காமலே “தெரிகிறது” என்ற ஒற்றை சொல் பதில் கூறிய இதயகுமரன் சிறிது நேரத்துக்குப் பிறகு, “! இந்தச்சிலையைத் தங்கள் இதற்கு முன்பு பார்த்திருக்கிறீர்களா ?” என்று எதிரே எட்ட நின்றிருந்த அந்த பெண்ணை நோக்கி கேள்வியொன்றையும் வீசினான்.

பத்து வீரர்கள் வாளேந்தி நின்ற சமயத்தில் அவன் கட்டிய அசட்டையும் தன்னை கேள்வி கேட்க முயன்ற துணிவையும் கண்ட அரசகுமாரியின் விழிகளில் சீற்றம் சிறிது விலகி வியப்பு குடிகொண்டதால், “ அதைப்பற்றி உனக்கென்ன ?” என்று வினவினாள், வியப்பு துலங்கிய குரலில்.

“காரணம் இருக்கிறது அரசகுமாரி” என்ற இதயகுமரன், தன் கையிலிருந் சிறிது துக்கி அவள் கண்களில் அது நன்றாக படும்படி காட்டியதன்றி, “உங்களுக்கும் இதற்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது” மீண்டும் சிலையைத்தனக்காகத் திருப்பி அதை நோக்கி விட்டு அரசகுமாரியையும் கவனித்தான்.

அரசகுமாரியின் இடை துவண்ட காரணத்தாலோ என்னவோ அவள் தனது இடையை மேலும் ஒடித்து ஒரு புறமாகச்சாய்ந்து நிற்கவே பெரும் பிரமை பிடித்து கொண்டது இதயகுமரனை. “சந்தேகமில்லை. துளிக்கூட வித்தியாசமில்லை.” மிக மெதுவாகச் சொல்லிக்கொண்டன் அந்த வாலிபன்.

சிற்றிடை அதிகமாக ஒடிந்து நின்ற நிலையில் அரசகுமாரி சாட்சாத் அந்த சிலையைப்போலவே காட்சியளித்தாள். அவள் சுந்தர முகமும் சிலையின் முகத்தைப்போலவே பழுப்பேறிய போலிருந்தது. காலை நீரட்டத்தின் போது அவள் பூசியிருந்த மஞ்சளின் காரணமாக அவள் நெற்றியும் கன்னங்களும் தந்தத்தின் நிறங்கொண்டதன்றி கோபத்தில் சிறிதே சிவந்து விட்ட வழவழத்த கன்னங்கள் சிலையில் ஏற்கனவே ஓட்டியிருந்து பிறகு துடைக்கப்பட்டு விட்ட செம்மண்ணின் நிறத்தையும் தங்களிடம் கூட்டி கொண்டன. பிறை நுதலுக்கு மேல் வகிடு எடுத்துப் பின்னல் பெரிதாக முடிக்கப்பட்டிருந்த தலைக் கருங் குழலின்நிறம் சிலையின் குழல்நிறத்திலிருந்து மாறுபட்டிருந்தேயொழிய, முடிப்பின் முறையும் சிலையின் முடிப்பைப் போலவே மிகக் கவர்ச்சியாக இருந்த்து.

இடைக்குச்சற்று மேலே எழுந்த இரட்டை அழகுகளின் பரிமானம் அதிகமே தவிர மற்றபடி சிலையின் மார்பக்கத்தின் அமைப்பே அவளுக்குமிருந்தது. இருப்பது பொய்யோ எனும் இடைக்குக் கிழே தெரிந்த ஆலிலை வயிறும் சரி, அதன் கிழே உறுதியுடன் செதுக்கிவிட்டது போல் உருண்டும் பருத்தும் இறங்கிய கால்களும் சரி, சிலையின் உருவத்தை அப்படியே அச்சாக வார்த்திருந்த்து
இப்படித் திகைக்கும் படியாகா இருந்த ஒற்றுமையைக்கவனித்துப் பிரமித்த இதயகுமரன் மனதில் எண்ணங்கள் ஏதேதோ எழுந்தாலும் உணர்ச்சிகள் பலபடி சுழன்றாலும், அவற்றுக்கெல்லாம் இடங்கொடாமல் அரசகுமாரியை பார்த்து, “அரசகுமாரி! உங்கள் காவலரை சற்று விலகச்சொல்லுங்கள்” என்று விண்ணப்பித்துக் கொண்டான்.

அப்பொழுதாவது அரசகுமாரி சிறிது சிந்தித்திருக்கலாம் ஆனால், உள்ளே எழுந்திருந் சீற்றம் அதிகப்படவே தனது காவலரை நோக்கி,“ஏன் நிற்கிறீர்கள்? கடமையைச் செய்யுங்கள்.” என்று உத்தரவிட்வே செய்தாள். அந்தப் பிழையை அவள் இரண்டாம் முறை செய்திருக்கவிட்டல்,அவன் சிலையையும் நோக்கி தன்னையும் ஆராய்ந்த தருணத்தில் ஏற்பட்ட சிறு மாறுதல்களைக் கவனித்து இருந்தால், நிலைமை பெரிதும் மாறுபட்டிருக்கும்.

அவன் அவளுடன் பேச்சுக் கொடுத்த சமயத்தில் விஜயன் மெள்ள அவனை நோக்கி நகர்ந்து அருகில் நின்று விட்டது. அதன் முதுகில் எறியப்பட்ட கடிவாளம் அவன் வலது கையை சிறிது தடவவும் முற்பட்ட சமயத்தில் காவலர் தலைவன் தனது வலை சிறிது அழுத்தினான் இதயகுமரன் மார்புமீது,“உன் வாளை இப்படிக்கொடு” என்று கையையும் நீட்டினான். “அரசகுமாரியின் உத்தரவுப்படி நடந்தால் நீ பிழைக்கக்கூடப் பிழைக்கலாம்” என்று கூறிக்கொண்டே இதயகுமரனை அணுகி வாளின் உறையில் கையை வைத்தான்.

அடுத்த விநாடி முற்றிலும் எதிர்பாரத மின்ன்னல் நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. காவலர் தலைவன் நீட்டிய கை வெகு வேகமாக இழுக்கப்பட்டது இதயகுமரன் வலது கரத்தால். கண்ணிமைகும் நேரத்தில் வேகமாக விசிறப்பட்ட காவலர் தலைவன் எதோ வித்தை செய்பவனைப் போல் குனிந்து ஓடி அருகிலிருந்த புதரில் போய் விழுந்தான்.அவன் புதரில் விழுவதற்கு எடுக்கப்பட்டுச் சுழற்ப்பட்ட இதயகுமரன் வாள் இரு வீரர்கள் கைகளில் பாய்ந்து விடவே அவர்கள் அலற, மற்றவர்கள் சற்றுப் பின்னடைந்து அந்த வாலிபன் மீது வாட்களை செழுத்தி விட முயன்றனர். அவர்களை வாட்களை எழுப்பு முன்பு விஜயன் மீது பாய்ந்து விட்ட இதயகுமரன் அதன், சிலையையும் சேர்த்துப் பிடித்து கொண்டு, சிறிது குனிந்து யை இடது கையால் ஒரே தூக்கில் தூக்கிக் கொண்டு புரவியுடன் சேர்த்து அவளை அணைத்த வண்ணம் அடர்ந்த காட்டுக்குள் புகுந்துவிட்டன், கருத்த மேகத்தை ஊடுருவும் மின்னல் போல.

அவன் பின்னல் காவலர் கூச்சல் பலமாக கேட்டுக் கொண்டிருந்தது. “அரசகுமாரி! அரசகுமாரி!” என்று கூக்குரல்கள் பலபடி எழுந்தன. புரவிகளின் குளம்படிச் சத்தங்களும் ஏராளமாக கேட்டன.அத்தனையும் லட்சியம் செய்யாத இதயகுமரன் , மரங்கள் அடர்த்தியாயிருந்த ஒரு பகுதிக்கு வந்ததும் அரசகுமாரியை நன்றாக புரவிமீது ஏற்றி விட்டுபுரவியை காட்டின் உட்பகுதியில் நிதானமாக நடக்க விட்டன். அப்படி நடந்த புரவி மரங்கள் அடர்த்தியில்லாத ஒரு பகுதிக்கு வந்ததும் அரசகுமாரியைப் புரவியிலிருந்து இறக்காமல் தான் மட்டும் இறங்கி நின்று கொண்டான் அந்த வாலிப வீரன். “அரசகுமாரி! அவசியமானால் நீங்களும் சற்று இளைப்பாறலாம்” என்றும் கூறினான்.

அரசகுமாரி ருந்து இறங்காமலே அவனை இகழ்ச்சிக் கண்களுடன் நோக்கினாள். “ நீங்கள் பெரிய வீரராயிருகாலம். ஆனால் அறிவாளியல்ல” என்றாள். அவள் பேச்சில் முதன் முதலாக மரியாதையை தெரிந்து.
“அப்படியா அரசகுமாரி” என்று வினவிய இதயகுமரன் அவளைப் பார்த்து சிறிது நகைத்து, “ உங்களைப் போன்ற மோகனச்சிலையை பார்க்கும் போது அறிவிழத்தல் அது இயற்கைதானே” என்றன், நகைப்பு குரலில் லேசாக ஒலிக்க.

பதில் கூறவில்லை அரசகுமாரி அவனுக்கு. புரவியின் கடிவாளத்தை இழுத்து அதன் லும் உதைத்தாள் தனது இடது காலால். அடுத்த விநாடி அவள் ஏமாற்றம் அளவிட முடியாததால் திகைப்பும் விரிந்தது அவள் சுந்தரவதனத்தில். விஜயன் கடிவாளஇழுப்புக்கோ,வயிற்றில் கிடைத்த உதைக்கோ நகர மறுத்து கல்லால் செதுக்கப்பட்டது போல் அசையாமல் நின்றது ஒருவிநாடி. பிறகு தலையை திருப்பி அரசகுமாரியை நோக்கி பற்களை பயங்கரமாகத் திறந்தது, சிரித்தது. “இது குதிரையா கழுதையா?” என்று சீறினாள் அரசகுமாரி விஜயனையும் நோக்கி, இதயகுமரனையும் நோக்கி.

இதயகுமரன் இதழ்களில் இளநகையொன்று அரும்பியது. “அரசகுமாரி! சொன்னால் தவறாக நினைக்க மாட்டீர்களே?” என்று கேட்டான் இதயகுமரன் பணிவு நிரம்பிய குரலில்.

“எதை வேண்டுமானாலும் சொல்” என்ற அரசகுமாரியின் சொற்களில் சினமில்லை, பழைய மரியாதையை இல்லை; இகழ்ச்சி அதிகமாயிருந்த்து.
“விஜயன் ? கழுதை என்கிறீர்கள்....” சொற்களை முடிக்கவில்லை இதயகுமரன்.
“யார் விஜயன்” என்று அரசகுமாரி குறுக்கிட்டாள்.
“நீங்கள் அமர்ந்திருக்கும் என் புரவி” என்று விண்ணப்பித்துக் கொண்டான் இதயகுமரன்.
“அப்படியா ?”
“ஆம்”
“அதைக்கழுதையொன்றால் என்ன தவறு ? இடது காலால் வயிற்றில் உதைத்தேன். அப்பொழுதும் கிளம்பவில்ல” என்று சுட்டிக்கட்டினாள் அரசகுமாரி.
“உதைத்தது தங்கள்தனே ? விஜயனல்லவே” என்று இதயகுமரன் கேட்டான். அவன் கேள்வியில் விஷமம் பரிபூரணமாக ஒலித்தது.

அவன் என்ன சொல்கிறான் என்பதை புயந்து கொண்டதால் அரசகுமாரியின் முகம் சீற்றத்தாலும், அந்த வாலிபன் சுட்டிக்கட்டிய நிந்தையாலும் பெரிதும் சிவந்தது. நீள் விழிகள் அவனை சுட்டுவிடுவனபோல் பார்த்தன. அவள் முகமற்றத்தைக் கவனித்த இதயகுமரன், அரசகுமாரிக்கு அருகில் வந்து, “அரசகுமாரி! விஜயன் என் புரவி மட்டுமல்ல. என் தோழன். அவனை வசை பாடுவது என்னை வசைபாடுவதாகும். இருப்பினும் எனக்கு கோபமில்லை அரசகுமாரி! அவன் வயிறு இரும்பு போன்றது. அதை உதைத்ததால் உங்கள் கமலப்பாதம் சிவந்து விட்டது. இதோ பாருங்கள்” என்று கூறிகொண்டே அவள் இடது பாதத்தை எடுத்து கையால் தடவிக்கொடுத்தான்.

வாலிபனின் கைபட்டதால் அதுவரை சிவந்திருந்த பதம் முன்னை விட அதிகமாகச் சிவந்தது. உடலில் அன்று வரை அனுபவிக்காத உணர்ச்சிகள் ஊடுருவிச்சென்றன. அவற்றின் விளைவாக அவள் காலைச் சிறிது இழுத்துக் கொள்ள முயன்றாளானாலும், அந்த வாலிபனின் மெதுவான பிடியே இரும்பு பிடியாயிந்ததால் தனது மலர் காலை விடுவித்துக்கொள்ள முடியவில்லை அவளால். அகவே, “காலை விடுகிறாய, இல்லையா?” என்று சீறினள் அரசகுமாரி.

இதயகுமரன் அவள் காலை விட்டான் மிக மெதுவாக. “அரசகுமாரி! மன்னிக்க வேண்டும். எந்த ஆடவனும் சித்தமிழக்கும் சமயங்கள் உண்டு” என்று மிக பணிவுடன் கூறினான்.

அவன் பணிவைக்கண்டாள். அவன் புரவியிலிருந்து சிறிது விலகி நின்று விட்ட பண்பையும் கண்டாள். எதோ நினைத்துக்கோண்டவள் வலது காலையும் இடது பக்கத்தில் திருப்பிப் போட்டுப் புரவியிலிருந்து லேசாகச்சரிந்து கீழே இறங்கி நின்றாள் புரவிமீது சாய்ந்த வண்ணம். அவள் நின்ற தோரணையைக் கண்ட இதயகுமரன் மீண்டும் உலகை மறந்தான். அவள் அழகு அவள் நின்ற பாணியில் பன் மடங்கு அதிகமமாக தெரிந்தது இதயகுமரன் கண்களுக்கு. மரக்கூட்டம் சிறிது விலகியிருந் இடமாதலால், ஊடுருவி வந்த கதிரவன் கதிகள் அவள் மீது பட்டதால் அவள் வழவழத்த கன்னங்கள் அதிகமாக மெருகு பெற்று பளபளத்தன. அன்று காலையில் அவள் நீராடி. தலையை கோதிவிட்டுப் பெரிதாக முடிந்திருந்த குழலின் ஒரு பக்கமாக இருந்த செண்பக மலர், சிவப்பும் மஞ்சளும் கலந்த தனது இதழைத் திறந்து அவள் கன்னங்களின் அழகை குறைக்கப்பார்த்தாலும், அது மூடியவில்லை என்பதை புரிந்து கொண்டான் இதயகுமரன். அவன் கையிலிருந்த சிலையே உயிபெற்று வளர்ந்து பருவச் சிலையாகத் தன்னேதிரில் நின்று விட்ட பிரமை இதயகுமரனுக்கு ஏற்பட்டதால் அரசகுமாரியை அணுக ஒரு காலை எடுத்து வைத்தவன்மீண்டும் காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டான். “அரசகுமாரி!” என்று மெள்ள குரலும் கொடுத்தான்.

அவன் தன்னை அணுகக்காலை எடுத்து வைத்ததையும் அரசகுமாரி கவனித்தாள். பிறகு காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டதையும் கவனித்தாள். அவன் மிக பண்புள்ளவன் என்பதை புரிந்து கொண்டதால் பணிவுடன் உரையாடவும் தொடங்கினாள். “நீங்கள் இந்த ஊருக்குப்புதிதாக இருக்க வேண்டும்” என்றாள் தலையை நிலத்தில் தாழ்திய வண்ணம்.
“ஆம்.” இதயகுமரன் பதில் திட்டமாக இருந்தது.
“வந்ததும் ஆபத்தில் சிக்கிகொண்டீர்கள்”
“ஆம்.”
“என் வீரர்களை எதிர்த்தீர்கள்”
“ஆம்.”
“அரசகுமாரியான என்னைத் தூக்கிக்கொண்டு வந்தீர்கள்!”
“ஆம்.”
“இதற்கு மரணதண்டனை.”
“தெரியும்”
இதை கேட்டதும் அரசகுமாரி சிலையென நின்றாள். பிறகு கேட்டாள். “ நீங்கள் யாரைப் பார்க்க வந்தீர்கள் இந்த ஊருக்கு?” என்று வினவினாள்.
“இந்த ஊர் அரசகுமாரியை” என்று பதில்சொன்னான் இதயகுமரன்.

“எதற்கு” என்று வினவினாள் அவள்.
“அதை அரசகுமாரியிடம்தான் சொல்ல வேண்டும்” என்றன் அந்த வாலிபன்.
“சரி, சொல்லுங்கள்” என்று ஊக்கினாள் அவள்.
அவன் பதில் ஏதும் சொல்லாததால் அவள் மீண்டும் கேட்டாள், “வீரரே! அஞ்சவேண்டாம். சொலுங்கள்” என்று. இம்முறை மரியாதையை பெரிதும் ஒலித்தது அவள் குரலில். அது வரை அவள் குரலிலிருந்த வெறுப்பு, இகழ்ச்சி இரண்டும் மறைந்து விட்டன.
அவன் அப்பொழுதும் பேச மறுத்தான். பேசிய போது அவளுக்குக்காத்திருந்தது பெரிய அதிர்ச்சி. அந்த அதிர்ச்சியை தொடர்ந்து அரசகுமாரியின் சிறிது நடுங்கியது. “நீ வீரனா ? பித்தனா ?” என்று வினவினாள் அவள். மரியாதையைக் கைவிட்டு, குரலிலும் நடுக்கம் துலங்க.

Advertisement