» காலனுக்கு உரைத்தல்

ஆசிரியர் : மகாகவி பாரதியார்.

ராகம்-சக்கரவாகம்
தாளம்-ஆதி

பல்லவி
காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா)

சரணங்கள்

௧)

வேலாயுத விருதினை மனதிற் மதிக்கிறேன்;என்றன்
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித்
[துதிக்கிறேன்-ஆதி
மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே-நின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட,
[மூடனே?அட (காலா)

௨)

ஆலாலமுண்டவனடி சரணென்ற மார்க்கண்டன்-தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை
[யறிகுவேன்-இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல்!உனைவிதிக்கிறேன்-ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட
(காலா)