» காடு

ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.

[காவடிச் சிந்து மெட்டு]

முட்புதர்கள் மொய்த்ததரை எங்கும்! - எதிர்
முட்டுகருங் கற்களும்நெ ருங்கும் - மக்கள்
இட்டடி எடுத்தெடுத்து
வைக்கையிலே கால்களில்
தடுங்கும் - உள்
நடுங்கும்.

கிட்டிமர வேர்கள்பல கூடும் - அதன்
கீழிருந்து பாம்புவிரைந் தோடும் - மர
மட்டையசை வால்புலியின்
குட்டிகள்போய்த் தாய்ப்புலியைத்
தேடும் - பின்
வாடும்.

நீள்கிளைகள் ஆல்விழுதி னோடு - கொடி
நெய்துவைத்த நற்சிலந்திக் கூடு - கூர்
வாளெயிற்று வேங்கையெலாம்
வால்சுழற்றிப் பாயவருங்
காடு - பள்ளம்
மேடு!

கேளோடும் கிளம்பிவரும் பன்றி - நிலம்
கீண்டுகிழங் கேஎடுத்த தன்றி - மிகு
தூளிபடத் தாவுகையில்
ஊளையிடும் குள்ளநரி
குன்றில் - புகும்
ஒன்றி.

வானிடைஓர் வானடர்ந்த வாறு - பெரு
வண்கிளை மரங்கள்என்ன வீறு! - நல்ல
தேனடைசொ ரிந்ததுவும்
தென்னைமரம் ஊற்றியதும்
ஆறு - இன்பச்
சாறு!

கானிடைப் பெரும்பறவை நோக்கும் - அது
காலிடையே காலிகளைத் தூக்கும் - மற்றும்
ஆனினம் சுமந்தமடி
ஆறெனவே பால்சுரந்து
தீர்க்கும் - அடை
ஆக்கும்.

Advertisement