» தமிழ்க் காதல்

ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.

கமலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க்
காட்டினில் வண்டின் இசைவளத்தால்
கமழ்தரு தென்றல் சிலிர்சிலிர்ப்பால் - கருங்
கண்மலரால் முல்லை வெண்ணகைப்பால்
அமையும்அன் னங்களின் மென்னடையால் - மயில்
ஆட்டத்தினால் தளிர் ஊட்டத்தினால்
சமையும் ஒருத்தி-அப் பூஞ்சோலை - எனைத்
தன்வசம் ஆக்கிவிட் டாள்ஒருநாள்.

சோலை அணங்கொடு திண்ணையிலே - நான்
தோளினை ஊன்றி இருக்கையிலே
சேலை நிகர்த்த விழியுடையாள் - என்றன்
செந்தமிழ்ப் பத்தினி வந்துவிட்டாள்!
சோலையெ லாம்ஒளி வானமெலாம் - நல்ல
தோகையர் கூட்டமெ லாம்அளிக்கும்
கோலஇன் பத்தையென் உள்ளத்திலே - வந்து
கொட்டிவிட்டாள் எனைத் தொட்டிழுத்தாள்!

Advertisement