» தமிழ் உணவு

ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.

ஆற்றங் கரைதனிலே - இருள்
அந்தியிலே குளிர் தந்த நிலாவினில்,
காற்றிலுட் கார்ந்திருந்தேன் - வெய்யிற்
காலத்தின் தீமை இலாததினால் அங்கு
வீற்றிருந்தார் பலபேர் - வந்து
மேல்விழும் தொல்லை மறந்திருந்தார்! பழச்
சாற்றுச் சுவைமொழியார் - சிலர்
தங்கள் மணாளரின் அண்டை யிருந்தனர்;
ஆற்றங் கரைதனிலே!

நாட்டின் நிலைபேசிப் - பல
நண்பர்கள் கூடி இருந்தனர் ஓர்புறம்.
ஓட்டம் பயின்றிடுவார் - நல்ல
ஒன்பது பத்துப் பிராயம் அடைந்தவர்;
கோட்டைப் பவுன்உருக்கிச் - செய்த
குத்து விளக்கினைப் போன்ற குழந்தைகள்
ஆட்ட நடைநடந்தே - மண்ணை
அள்ளுவர், வீழுவர், அம்புலி வேண்டுவர்;
ஆற்றங் கரைதனிலே!

புனலும் நிலாவொளியும் - அங்குப்
புதுமை செய்தே நௌிந்தோடும்! மரங்களில்
இனிது பறந்துபறந் - தங்கும்
இங்கும் அடங்கிடும் பாடிய பறவைகள்!
தனிஒரு வெள்ளிக்கலம் - சிந்தும்
தரளங்கள் போல்வன நிலவு நக்ஷத்திரம்!
புனையிருள் அந்திப்பெண்ணாள் - ஒளி
போர்த்ததுண்டோ எழில் பூத்ததுண்டோ அந்த
ஆற்றங் கரைதனிலே!

விந்தை உரைத்திடுவேன் - அந்த
வேளையில் அங்கொரு வாள்விழி கொண்டவள்
முந்தஓர் பாட்டுரைத்தாள் - அது
முற்றும் தெலுங்கில் முடிந்து தொலைந்தது;
பிந்தி வடக்கினிலே - மக்கள்
பேசிடும் பேச்சினில் பாட்டு நடத்தினள்.
எந்தவிதம் சகிப்பேன்? - கண்ட
இன்பம் அனைத்திலும் துன்பங்கள் சேர்ந்தன.
ஆற்றங் கரைதனிலே!

பொருளற்ற பாட்டுக்களை - அங்குப்
புத்தமு தென்றனர்; கைத்தாள மிட்டனர்;
இருளுக்குள் சித்திரத்தின் - திறன்
எற்படுமோ இன்பம் வாய்த்திடக் கூடுமோ?
உருவற்றுப் போனதுண்டோ - மிக்க
உயர்வுற்ற தமிழ்மக்கள் உணர்வுற்ற நல்வாழ்வு?
கருவுற்ற செந்தமிழ்ச்சொல் - ஒரு
கதியற்றுப் போனதுண்டோ அடடா! அந்த
ஆற்றங் கரைதனிலே!

சங்கீத விற்பனனாம் - ஒரு
சண்டாளன் ஆரம்பித்தான் இந்துஸ்தான் ஒன்றை;
அங்கந்தப் பாட்டினிலே - சுவை
அத்தனையும் கண்டு விட்டது போலவே
நம்குள்ளர் வாய்திறந்தே - நன்று
நன்றென ஆர்ப்பரித்தார்! அந்த நேரத்தில்
எங்கிருந்தோ தமிழில் - ஓர்
இன்ப நறுங்கவி கேட்டது காதினில்
ஆற்றங்கரைதனிலே!

"அஞ்சலை, உன்ஆசை - என்னை
அப்புறம் இப்புறம் போக விடாதடி
கொஞ்சம் இறங்கிடுவாய் - நல்ல
கோவைப் பழத்தினைப் போன்ற உதட்டினை
வஞ்சி, எனக்களிப்பாய்!" - என்ற
வண்ணத் தமிழ்ப்பதம் பண்ணிற் கலந்தென்றன்
நெஞ்சையும், வானத்தையும் - குளிர்
நீரையும், நிலவையும் தமிழர் குலத்தையும்

ஒன்றெனச் செய்ததுவே! - நல்
உவகை பெறச்செய்த தேதமிழ்ப் போசனம்!
நன்று தமிழ்வளர்க! - தமிழ்
நாட்டினில் எங்கணும் பல்குக! பல்குக!
என்றும் தமிழ்வளர்க! - கலை
யாவும் தமிழ்மொழியால் விளைந் தோங்குக!
இன்பம் எனப்படுதல் - தமிழ்
இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக!
ஆற்றங் கரைதனிலே!

Advertisement