» தொழிலாளர் விண்ணப்பம்

ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.

காடு களைந்தோம் - நல்ல
கழனி திருத்தியும் உழவு புரிந்தும்
நாடுகள் செய்தோம் - அங்கு
நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம்
வீடுகள் கண்டோம் - அங்கு
வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்
பாடுகள் பட்டோம் - புவி
பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம்.

மலையைப் பிளந்தோம் - புவி
வாழவென் றேகடல் ஆழமும் தூர்த்தோம்
அலைகடல் மீதில் - பல்
லாயிரங் கப்பல்கள் போய்வரச் செய்தோம்
பலதொல் லையுற்றோம் - யாம்
பாதாளம் சென்று பசும்பொன் எடுத்தோம்
உலையில் இரும்பை - யாம்
உருக்கிப்பல் யந்திரம் பெருக்கியுந் தந்தோம்.

ஆடைகள் நெய்தோம் - பெரும்
ஆற்றை வளைத்துநெல் நாற்றுக்கள் நட்டோம்;
கூடை கலங்கள் - முதல்
கோபுரம் நற்சுதை வேலைகள் செய்தோம்
கோடையைக் காக்க - யாம்
குடையளித் தோம்நல்ல நடையன்கள் செய்தோம்
தேடிய பண்டம் - இந்தச்
செகத்தில் நிறைந்திட முகத்தெதிர் வைத்தோம்.

வாழ்வுக் கொவ்வாத - இந்த
வையத்தில் இந்நிலை எய்தப் புரிந்தோம்
ஆழ்கடல் காடு - மலை
அத்தனை யிற்பல சத்தை யெடுத்தோம்.
ஈழை அசுத்தம் - குப்பை
இலைஎன்ன வேஎங்கள் தலையிற் சுமந்தோம்.
சூழக் கிடந்தோம் - புவித்
தொழிலாள ராம்எங்கள் நிலைமையைக் கேளீர்.

கந்தை யணிந்தோம் - இரு
கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்.
மொந்தையிற் கூழைப் - பலர்
மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம்
சந்தையில் மாடாய் - யாம்
சந்ததம் தங்கிட வீடுமில் லாமல்
சிந்தை மெலிந்தோம் - எங்கள்
சேவைக் கெலாம்இது செய்நன்றி தானோ?

மதத்தவன் தலைவீர்! - இந்த
மண்ணை வளைத்துள்ள அண்ணாத்தை மாரே!
குதர்க்கம் விளைத்தே - பெருங்
கொள்ளை யடித்திட்ட கோடி சுரர்காள்!
வதக்கிப் பிழிந்தே - சொத்தை
வடிகட்டி எம்மைத் துடிக்க விட்டீரே!
நிதியின் பெருக்கம் - விளை
நிலமுற்றும் உங்கள் வசம்பண்ணி விட்டீர்!

செப்புதல் கேட்பீர்! - இந்தச்
செகத்தொழி லாளர்கள் மிகப்பலர் ஆதலின்,
கப்பல் களாக - இனித்
தொழும்பர்க ளாக மதித்திட வேண்டாம்!
இப்பொழு தேநீர் - பொது
இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை
ஒப்ப டைப்பீரே - எங்கள்
உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே
ஒப்படைப்பீரே!

Advertisement