» வாழ்வில் உயர்வுகொள்!

ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.

சுயமரி யாதைகொள் தோழா! - நீ
துயர் கெடுப்பாய் வாழ்வில் உயர்வடைவாயே!
சுயமரி யாதைகொள் ...

உயர்வென்று பார்ப்பனன் சொன்னால் - நீ
உலகினில் மக்கள் எல்லாம்சமம் என்பாய்;
துயருறத் தாழ்ந்தவர் உள்ளார் - என்று
சொல்லிடுந் தீயரைத் தூவென் றுமிழ்வாய்!
அயலொரு கூட்டத்தார் ஆள்வோர் - சிலர்
ஆட்பட் டிருப்பவர் என்று சொல்வோரைப்
பயமின்றி நீதிருந் தச்சொல்! - சிலர்
பழமைசொன் னால்புது நிலைநலம் காட்டு!
சுயமரி யாதைகொள் ...

சேசு முகம்மது என்றும் - மற்றும்
சிவனென்றும் அரியென்றும் சித்தார்த்த னென்றும்,
பேசி வளர்க்கின்ற போரில் - உன்
பெயரையும் கூட்டுவார் நீஒப்ப வேண்டாம்!
காசைப் பிடுங்கிடு தற்கே - பலர்
கடவுளென் பார்!இரு காதையும் மூடு!
கூசி நடுங்கிடு தம்பி! - கெட்ட
கோயிலென் றால்ஒரு காதத்தி லோடு!
சுயமரி யாதைகொள் ...

கோயில் திருப்பணி என்பார் - அந்தக்
கோவில் விழாவென்று சொல்லியுன் வீட்டு
வாயிலில் வந்துனைக் காசு - கேட்கும்
வஞ்சக மூடரை மனிதர் என்னாதே!
வாயைத் திறக்கவும் சக்தி - இன்றி
வயிற்றைப் பிசைந்திடும் ஏழைகட் கேநீ
தாயென்ற பாவனை யோடும் - உன்
சதையையும் ஈந்திட ஒப்புதல் வேண்டும்.
சுயமரி யாதைகொள் ...

கடவுள் துவக்கிக் கொடுத்த - பல
கவிதைகள், பதிகங்கள் செப்பிய பேர்கள்,
கடவுள் புவிக்கவ தாரம் - அந்தக்
கடவுளின் தொண்டர்கள், லோக குருக்கள்,
கடவுள் நிகர் தம்பிரான்கள் - ஜீயர்,
கழுகொத்த பூசுரர், பரமாத்து மாக்கள்
கடவுள் அனுப்பிய தூதர் - வேறு
கதைகளி னாலும் சுகங்கண்ட துண்டா?
சுயமரி யாதைகொள் ...

அடிமை தவிர்த்ததும் உண்டோ? - அன்றி
ஆதிமுதல் இந்தத் தேதி வரைக்கும்,
மிடிமை தவிர்த்ததும் உண்டோ? - அன்றி
மேல்நிலை என்பதைக் கண்டதும் உண்டோ?
குடிக்கவும் நீரற் றிருக்கும் - ஏழைக்
கூட்டத்தை எண்ணாமல், கொடுந்தடி யர்க்கு
மடங்கட்டி வைத்ததி னாலே - தம்பி!
வசம்கெட்டுப் போனது நமதுநன் னாடு.
சுயமரி யாதைகொள் ...

உழைக்காத வஞ்சகர் தம்மை - மிக
உயர்வான சாதுக்கள் என்பது நன்றோ?
விழித்திருக் கும்போதி லேயே - நாட்டில்
விளையாடும் திருடரைச் சாமிஎன் கின்றார்!
அழியாத மூடத் தனத்தை - ஏட்டில்
அழகாய் வரைந்திடும் பழிகாரர் தம்மை
முழுதாய்ந்த பாவலர் என்பார் - இவர்
முதலெழுத் தோதினும் மதியிருட் டாகும்!
சுயமரி யாதைகொள் ...

Advertisement