» எழுச்சியுற்ற பெண்கள்

ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.

மேற்றிசையில் வானத்தில் பொன்னு ருக்கு
வெள்ளத்தில் செம்பருதி மிதக்கும் நேரம்!
வேற்கண்ணி யாளொருத்தி சோலை தன்னில்
விளையாட நின்றிருந்தாள் மயிலைப் போல!
காற்றடித்த சோலையிலே நேரம் பார்த்துக்
கனியடித்துக் கொண்டுசெலும் செல்வப் பிள்ளை
ஆற்றுவெள்ளம் போலாசை வெள்ளம் தூண்ட
அவளிடத்தே சிலசொன்னான். பின்னுஞ் சொல்வான்:

விரிந்தஒரு வானத்தின் ஒளிவெள் ளத்தை
விரைந்துவந்து கருமேகம் விழுங்கக் கூடும்!
இருந்தவெயில் இருளாகும் ஒருக ணத்தில்!
இதுஅதுவாய் மாறிவிடும் மறுக ணத்தில்.
தெரிந்ததுதான்; ஆனாலும் ஒன்றே யொன்று!
தௌிந்தஓர் உள்ளத்தில் எழுந்த காதல்
பருந்துவந்து கொத்துமென்றும் தணிவ தில்லை;
படைதிரண்டு வந்தாலும் சலிப்ப தில்லை!

கன்னத்தில் ஒருமுத்தம் வைப்பாய் பெண்ணே,
கருதுவதிற் பயனில்லை; தனியாய் நின்று
மின்னிவிட்டாய் என்மனதில்! பொன்னாய்ப் பூவாய்
விளைந்துவிட்டாய் கண்ணெதிரில்! என்று சொன்னான்.
கன்னியொரு வார்த்தையென்றாள். என்ன வென்றான்;
கல்வியற்ற மனிதனைநான் மதியேன் என்றாள்.
பன்னூற்பண் டிதனென்று தன்னைச் சொன்னான்.
பழச்சுளையின் வாய்திறந்து சிரித்துச் சொல்வாள்:

பெருங்கல்விப் பண்டிதனே உனக்கோர் கேள்வி;
பெண்களுக்குச் சுதந்தரந்தான் உண்டோ? என்றாள்.
தரும்போது கொள்வதுதான் தருமம் என்றான்.
தராவிடில்நான் மேற்கொண்டால் என்ன வென்றாள்.
திருமணமா காதவள்தன் பெற்றோ ரின்றிச்
செயல்ஒன்று தான்செய்தல் அதர்மம் என்றான்.
மருவஅழைக் கின்றாயே, நானும் என்றன்
மாதா பிதாவின்றி விடைசொல் வேனா?

என்றுரைத்தாள். இதுகேட்டுச் செல்வப் பிள்ளை
என்னேடி, இதுஉனக்குத் தெரிய வில்லை;
மன்றல்செயும் விஷயத்தில் ஒன்றில் மட்டும்
மனம்போல நடக்கலாம் பெண்கள் என்றான்.
என்மனது வேறொருவன் இடத்தி லென்றே
இவனிட்ட பீடிகையைப் பறக்கச் செய்தாள்.
உன்நலத்தை இழுக்கின்றாய்; வலிய நானே
உனக்களிப்பேன் இன்பமென நெருங்க லானான்!

அருகவளும் நெருங்கிவந்தாள்; தன்மேல் வைத்த
ஆர்வந்தான் எனநினைத்தான்! இமைக்கு முன்னே
ஒருகையில் உடைவாளும் இடது கையில்
ஓடிப்போ! என்னுமொரு குறிப்பு மாகப்
புருவத்தை மேலேற்றி விழித்துச் சொல்வாள்:
"புனிதத்தால் என்காதல் பிறன் மேலென்று
பரிந்துரைத்தேன்! மேற்சென்றாய்! தௌிந்த காதல்
படைதிரண்டு வந்தாலும் சலியா" தென்றாள்.

ஓடினான் ஓடினான் செல்வப் பிள்ளை
ஓடிவந்து மூச்சு விட்டான் என்னிடத்தில்.
கூடிஇரு நூறுபுலி எதிர்த்த துண்டோ?
கொலையாளி யிடமிருந்து மீண்ட துண்டோ?
ஓடிவந்த காரணத்தைக் கேட்டேன். அன்னோன்
உரைத்துவிட்டான்! நானவற்றைக் கேட்டு விட்டேன்.
கோடிஉள்ளம் வேண்டுமிந்த மகிழ்ச்சி தாங்கக்
குலுங்க நகைத் தேயுரைத்தேன் அவனிடத்தில்:

"செல்வப்பிள்ளாய்! இன்று புவியின் பெண்கள்
சிறுநிலையில் இருக்கவில்லை; விழித்துக் கொண்டார்!
கொல்லவந்த வாளைநீ குறைசொல் லாதே!
கொடுவாள்போல் மற்றொருவாள் உன் மனைவி
மெல்லிடையில் நீகாணாக் காரணத் தால்,
விளையாட நினைத்துவிட்டாய் ஊர்ப்பெண் கள்மேல்!
பொல்லாத மானிடனே, மனச்சான் றுக்குள்
புகுந்துகொள்வாய்! நிற்காதே!" என்றேன்; சென்றான்.

Advertisement