» தவிப்பதற்கோ பிள்ளை?

ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.

விளக்குவைத்த நேரத்தில் என்வேலைக் காரி
வௌிப்புறத்தில் திண்ணையிலே என்னிடத்தில் வந்து
களிப்புடனே "பிரசவந்தான் ஆய்விட்ட" தென்றாள்!
காதினிலே குழந்தையழும் இன்னொலியும் கேட்டேன்!
உளக்கலசம் வழிந்துவரும் சந்தோஷத் தாலே
உயிரெல்லாம் உடலெல்லாம் நனைந்துவிட்டேன். நன்றாய்
வளர்த்துவரக் குழந்தைக்கு வயதுமூன் றின்பின்
மனைவிதான் மற்றுமொரு கருப்பமுற லானாள்.

பெண்குழந்தை பிறந்ததினி ஆண்குழந்தை ஒன்று
பிறக்குமா என்றிருந்தேன். அவ்வாறே பெற்றாள்!
கண்ணழகும் முகஅழகும் கண்டுபல நாட்கள்
கழிக்கையிலே மற்றொன்றும் பின்னொன்றும் பெற்றாள்!
எண்ணுமொரு நால்வரையும் எண்ணி யுழைத்திட்டேன்.
எழில்மனைவி தன்னுடலில் முக்காலும் தேய்ந்தாள்!
உண்ணுவதை நானுண்ண மனம்வருவ தில்லை;
உண்ணாமலே மனைவி பிள்ளைகளைக் காத்தாள்.

வரும்படியை நினைக்கையிலே உள்ளமெலாம் நோகும்!
வாராத நினைவெல்லாம் வந்துவந்து தோன்றும்!
துரும்பேனும் என்னிடத்தில் சொத்தில்லை! நோயால்
தொடர்பாகப் பத்துநாள் படுத்துவிட்டாள் தொல்லை!
அரும்பாடு மிகப்படவும் ஆக்ஷேப மில்லை;
ஆர்தருவார் இந்நாளில் அத்தனைக்கும் கூலி?
இரும்பாநான்? செத்துவிட்டால் என்பிள்ளை கட்கே
என்னகதி? ஏன்பெற்றேன்? எனநினைக்கு நாளில்,

ஒருதினத்தில் பத்துமணி இரவினிலே வீட்டில்
உணவருந்திப் படுக்கையொடு தலையணையும் தூக்கி
தெருத்திண்ணை மேல்இட்டேன்! நித்திரையும் போனேன்!
சிறுவரெல்லாம் அறைவீட்டில் தூங்கியபின் என்றன்
அருமனைவி என்னிடத்தே மெதுவாக வந்தாள்.
"அயர்ந்தீரோ" என்றுரைத்தாள்! மலர்க்கரத்தாள் தொட்டாள்!
"தெருவினிலேபனி" என்றாள். ஆமென்று சொன்னேன்;
தெரிந்துகொண்டேன் அவள்உள்ளம். வார்த்தையென்ன தேவை!

மனையாளும் நானுமாய் ஒருநிமிஷ நேரம்
மவுனத்தில் ஆழ்ந்திருந்தோம். வாய்த்ததொரு கனவு:
"கனல்புரளும் ஏழ்மையெனும் பெருங்கடலில், அந்தோ!
கதியற்ற குழந்தைகளோர் கோடான கோடி
மனம்பதைக்கச் சாக்காட்டை மருவுகின்ற நேரம்
வந்ததொரு பணம்என்ற கொடிபறக்கும் கப்பல்;
இனத்தவரின் குழந்தைகளோ, ஏ!என்று கெஞ்ச
ஏறிவந்த சீமான்கள் சீ!என்று போனார்."

கனவொழிய நனவுலகில் இறங்கிவந்தோம் நாங்கள்;
காதலெனும் கடல்முழுக்கை வெறுத்துவிட்டோம். மெய்யாய்த்
தினம்நாங்கள் படும்பாட்டை யாரறியக் கூடும்?
சீ!சீ!!சீ!!! இங்கினியும் காதல் ஒருகேடா?
எனமுடித்தோம். ஆனாலும் வீட்டுக்குள் சென்றோம்.
இன்பமெனும் காந்தந்தான் எமையிழுத்த துண்டோ!
தனியறையில் கண்ணொடுகண் சந்தித்த ஆங்கே
தடுக்கிவிழுந் தோம்காதல் வெள்ளத்தின் உள்ளே!

பத்துமா தம்செல்லப் பகற்போதில் ஓர்நாள்,
பட்டகடன் காரர்வந்து படுத்துகின்ற நேரம்,
சித்தமெலாம் மூத்தபெண் சுரநோயை எண்ணித்
திடுக்கிடுங்கால், ஒருகிழவி என்னிடத்தில் வந்து
முத்தாலம்மை வைத்த கிருபையினால் நல்ல
முகூர்த்தத்தில் உன்மனைவி பிள்ளைபெற்றாள் என்றாள்.
தொத்துநோய், எழ்மை, பணக்காரர் தொல்லை
தொடர்ந்தடிக்கும் சூறையிலே பிள்ளையோ பிள்ளை!

காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்
கதவொன்று கண்டறிவோம். இதிலென்ன குற்றம்?
சாதலுக்கோ பிள்ளை? தவிப்பதற்கோ பிள்ளை?
சந்தான முறைநன்று; தவிர்க்குமுறை தீதோ?
காதலுத்துக் கண்ணலுத்துக் கைகள் அலுத்துக்
கருத்தலுத்துப் போனோமே! கடைத்தேற மக்கள்
ஓதலுக்கெல் லாம்மறுப்பா? என்னருமை நாடே,
உணர்வுகொள் உள்ளத்தில் உடலுயிரில் நீயே.

Advertisement