» இனி எல்லாமே நீயல்லவோ 1

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்த வேளை! அந்தச் சாலையோரத்துச் சின்ன விடுதியின் முன்னே சத்தமின்றி, ஒரு நீளக் கார் வந்து நின்றது!

காரை நிறுத்தி விட்டு, உள்ளே சென்றால், "உங்கள் அறை தயாராக இருக்கிறது. கடைசி மாடியில் ஒரே பெரிய அறை!" என்றார்கள்.

பரவாயில்லை! அவன் கேட்டபடிதான் தந்திருக்கிறார்கள்!

'ஆட்டிக்' மீதுள்ள ஒற்றை அறை என்றால், அடுத்த அறை மனிதர்கள் என்று, யாரையும் சந்திக்கத் தேவையிராது! சென்றது போல், ஓசையின்றி, அடுத்தவர் அறியாமல் திரும்பியும் சென்று விடலாம்! எந்தப் பிரச்சினைக்கும் வாய்ப்பே இராது! இல்லாவிட்டால், எங்கிருந்தாவது, கழுகுகள் மாதிரிப் பாய்ந்து விடுவார்கள்! குத்திக் குதறி, மனிதனை அடையாளமே இல்லாதபடி, அவர்கள் விருப்பத்துக்கு மாற்றிக் காட்டி விடுவார்கள்!

என்னமோ, அவன் தினமும் இப்படித்தான், ஏதோ வெறியன் என்பது போல!

பிணம் தின்னிக் கழுகுகள்!

புகழும் பணமும் வந்துவிட்டால், மனிதனுக்குச் சொந்த வாழ்க்கையே இருக்கக் கூடாதா?

மற்ற கோடிக்கணக்கான மனிதர்களைப் போன்ற தேவைகள், அவனுக்கும் இருக்கும் தானே? அதுவும், எதற்கும் சுதந்திரம் மிகுந்த இந்த நாட்டில்!

ஆனாலும், இவ்வளவு ரகசியம் காக்க வேண்டியிருக்கிறது! அப்படி இருந்துமே, சில சமயங்களில் கண்ட பேச்சுக்கு ஆளாக நேர்ந்திருக்கிறது... ஆனால், அதெல்லாம், தானாக மேலே வந்து விழுகிறவர்களால் நேர்ந்தது! அதனால், ரொம்பப் பேர் கெட்டு விடாமல் மீளவும் முடிந்திருக்கிறது!

லிஃப்டில் செல்லும் போதே, அவன் எலிசாவை மெச்சிக் கொண்டான்.

இடையிடையே, அவனது தேவை புரிந்து, இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்வதிலும், எலிசா கெட்டிக்காரிதான்!

மற்றபடி, படிக்க வந்தவனின் இன்னொரு திறமை புரிந்து, அதைச் செயல்படுத்தும் உரிமை பெற்றுத் தந்து, இன்று குன்றின் மீதிட்ட விளக்காய்க் கோடீசுவரனாக வாழ வழி செய்து கொடுத்தவளும் அவளே தானே!

அறை திறந்தே இருந்தது!

உள்ளே அவளும் இருந்தாள்!

அவனைக் கண்டதும், அறையின் உள்ளே இருந்தவள் அருகில் வந்துவிட, அவனுக்கு எலிசாவின் நினைவு மறைந்தது!

காலையில், இருள் மறையாத அளவுக்குச் சற்று அதிகாலையிலேயே, அந்தப் பெண்ணுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, அவன் கிளம்பும்போது, அவள் கெஞ்சுதலாகக் கேட்டாள், "எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாதா?" என்று.

எல்லோரும் இப்படித்தான் என்று மனதில் எண்ணியதைக் காட்டாமல், "அதற்கு உரிமை, எனக்குக் கிடையாதேம்மா! அதைக் காஸ்டிங் டைரக்டரிடம் கேட்டுப் பார்!" என்று விட்டுக் கிளம்பினான் அவன்!

அவளது செல், கைப்பைக்குள் இருந்து சிணுங்கியது!

அடுத்த வாடிக்கையாக இருக்கும் என்று அலட்சியமாக நினைத்தபடி, 'லிஃப்ட்' விசையை அழுத்தினான் அவன்.

'லிஃப்ட்' வந்து, கதவு திறக்கையில், "ஏய் இண்டியன் மேன், நில்லு, நில்லு!" என்று உள்ளிருந்து அவள் ஓடி வந்தாள்.

கடுப்புடன், "விடமாட்டார்களே!" என்று எண்ணியவாறு, அவசரமாக லிஃப்டின் உள்ளே செல்ல அவன் முயன்ற போது, செல்லை நீட்டி, "எலிசா! உன்னிடம் பேச வேண்டுமாம்! உன் பெயர் சொல்லாமல், பேசச் சொன்னாள்!" என்றாள் அவள்!

கை நீட்டி, செல்லை வாங்கும்போதே, உள்ளூரக் கலக்கியது அவனுக்கு!

இந்த மாதிரிச் செல்லும் போது, எந்த இடையூறும் அவனுக்குப் பிடிப்பதில்லை! அதனால், அவனது செல் எதையும் எடுத்துப் போக மாட்டான்! கார் கூட, அவன் பெயரில் வாங்கியது அல்ல!

சிறு தகவல் தெரிந்தாலும், மொய்த்து விடுவார்கள் என்று அவன் மிகவும் கவனமாக இருப்பான்! அது எலிசாவுக்கும் தெரியும் என்பதால், அவளும் எந்த வகையிலும் தொடர்பின்றி, தெரிந்த மாதிரியே காட்டிக் கொள்ளாமல், ஒதுங்கியே இருப்பாள். ஏற்பாட்டோடு சரி!

ஆனால், இன்று என்ன ஆயிற்று?

பெயர் சொல்லக் கூடாது என்றால், ஏதோ மீடியா பிரச்சினை தான்!

செல்லைக் காதில் வைத்து, "என்ன?" என்றான் அவன்.

"பதட்டப்படாமல், அமைதியாகக் கேள்! லாஸ் ஏஞ்சல்சில் இருந்து எவ்வளவு தூரத்தில் எந்த இடத்தில் இருக்கிறாய்?" என்று எலிசா தொடங்கவும், பொறுமையிழந்து குறுக்கிட்டு, "முதலில் விஷயத்தைச் சொல்லு! சீக்கிரம்!" என்றான் அவன்.

படப்பிடிப்பு நிறுவனத்தோடு பிரச்சினையா?

ஒப்பந்தம் தான் கையெழுத்திட்டாயிற்றே!

அல்லது...

"மித்ரா பத்திரமாகத்தான் இருக்கிறாள்?"

அவன் வீடு இருந்த பகுதியில் பாதுகாப்பு அதிகம் தான்! என்றாலும்...

"அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்" என்றாள் எலிசா.

வயிறு காலியான உணர்வுடன், "என்ன ஆயிற்று? சீக்கிரமாகச் சொல்லு! ப்ளீஸ்!"

"இனிப் பிழைத்து விடுவாள் என்று மருத்துவமனையில் சொல்லுகிறார்கள்! அதற்குள் விஷயம் வெளியே கசிந்து, ஒரே ரிப்போர்ட்டர்கள் கூட்டம்! நீ எங்கே, எங்கே என்று கேள்வி! தேடல்! நீ, மித்ராவை என்னிடமாவது விட்டுப் போயிருக்கலாமே!..."

"முதலில் என் மகளுக்கு என்ன ஆயிற்று? என்ன நிலையில் இருக்கிறாள் என்பதைச் சீக்கிரமாகச் சொல்லு! மற்றதைச் சொல்லி வளவளக்க வேண்டாம்!" என்றான் அவன் கவலையும், அதில் பிறந்த ஆத்திரமுமாக!

"அடுத்த தெருவில் யாருக்கோ பிறந்த நாள் என்று போயிருக்கிறாள்! ஆட்டம் போட்டதில், எப்படியோ தெருவுக்குப் போயிருக்கிறார்கள்! வேகமாக வந்த கார் இடித்து..."

"ஐயோ!"

சினேகிதியின் பிறந்த நாளைக்கு மித்ரா போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால், 'பேபி சிட்டர்', வேண்டாம் என்று சொன்னது நினைவு வந்தது அவனுக்கு.

வீட்டுக்கு வரும் பிள்ளைகளைச் சரியாகப் பார்த்துக் கொள்ளத் தெரியாதவர்கள், தன் பிள்ளைகளுக்குப் பிறந்த நாளை ஏன் கொண்டாடுகிறார்கள்?

"அதனால் தான் என் வீட்டில் விட்டிருக்கலாமே என்றேன்! இனிமேலாவது..."

"மித்ரா எங்கே இருக்கிறாள்? எந்த மருத்துவமனை?"

"அவளைப் பார்க்கப் போவதற்கா? கவனி, டீப்! இப்போதைக்கு மீடியாவிடம், எந்தவிதக் குறுக்கீடும் இல்லாமல் தனியாக இருந்து, கதை வசனம் எழுதப் போயிருப்பதாக ஒரு கதை சொல்லியிருக்கிறேன்! அது, அப்படியே இருக்கட்டும்! உன்னிடம் கேட்டாலும், கவனம் சிதறாமல் இருப்பதற்காகத் தனிமை நாடிப் போனதாகச் சொல்லி விடு! அதற்காகவே, போன் எண் கொடுக்கவில்லை. செல் கொண்டு போகவில்லை என்றும்! இருக்கும் இடம் சொல்லு. என் காரில், உன் டிரைவரோடு வருகிறேன். நீ போன காரை, டிரைவரிடம் கொடுத்துவிட்டு, என் காரில் மருத்துவமனைக்குப் போகலாம்!"

அவனுடைய ஏஜண்ட் எலிசா கேட்ட தகவல்களைக் கொடுத்துவிட்டு, செல்லை, அந்தப் பெண்ணிடம் நீட்டினான். அவன்!

அவள் கண்ணில் அதிக ஆர்வம் இருந்ததோ?

செல்லை அவளிடம் கொடாமல் நிறுத்தி, அதை ஆராய்ந்தான். எலிசாவுடன் அவன் பேசியது, பதிவாகி இருந்தது! கூடவே, அவனும் அவளுமாக ஒரு போட்டோ! ஏதேனும் ஒரு பத்திரிகைக்கு, டீ.வி.க்குக் கொடுத்தால், ஏகப்பட்ட பணம் கிடைக்குமே!

உதட்டைப் பிதுக்கி ஒரு பார்வை பார்த்துவிட்டு, அனைத்தையும் அழித்து, அவள் கையில் கொடுத்தான்!

முகம் கன்றி நின்ற அவளிடம், மேலும் சில நோட்டுகளைப் பையில் இருந்து எடுத்துக் கொடுத்துவிட்டு, வரவேற்பில் அமர்ந்து, எலிசாவுக்காகக் காத்திருக்கலானான்.

அவன் அதிக நேரம் காத்திருக்க நேரவில்லை!

யு.எஸ். சாலைகளில், தூரம் ஒரு பொருட்டல்ல!

ஆயினும், காத்திருந்த அந்த நேரத்தில், அவனது மனம் தவியாய்த் தவித்துவிட்டது!

மித்ராவுக்குத் தாயின் அரவணைப்பு கிடைத்ததில்லை!

சும்மா ஒரு கதை எழுதி, நண்பர்களாக நடிக்கப் போய், அதை ஒரு பெரிய டைரக்டர் பார்த்துத் திரைப்படம் ஆக்க ஏற்பாடு செய்தார்! கதையில் இருந்து மாறுபட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான், அவனை, அவர் கூடவே வைத்துக் கொண்டது!

ஆனால், டைரக்டர் திடீரென நோயுறவும், ஸ்டுடியோடிவில் அவனையே இயக்கச் சொன்னார்கள்!

படம், பெரும் வெற்றி!

தொடர்ந்த வளர்ச்சியில், சென்ற ஆண்டு ஆஸ்காரே கிடைத்தது!

முதலில் அவனுக்குத் திடீர்ப் புகழ் கிடைத்த போது, ஒட்டிக் கொண்டவள், மித்ராவுடைய தாய்! அந்த வயது, சூழ்நிலையில், அவனுக்கும் தப்பாகத் தெரியவில்லை! கர்ப்பம் என்றதும் திருமணமும், தன் போக்கில் நடந்ததுதான்!

மித்ரா பிறந்தாள்! அதே சமயம், அவனது இரண்டாவது படமும் பெருவெற்றி பெற்ற பிறகுதான், மனைவியாக இருப்பவளின் உண்மை உருவம், அவனுக்குத் தெரிய வந்தது!

அவளுக்கு நடிக்க ஆசை! தன்னைப் பெரிய கதாநாயகி ஆக்குவது, கணவனான அவனது கடமை என்றாள்.

நடிகைக்குரிய எதுவுமே அவளிடம் இல்லை என்று அவன் ஒரேயடியாக மறுக்கவும், பணமாவது கொடு என்று, விவாகரத்து வாங்கிக் கொண்டு போய் விட்டாள்!

அவள் பணம் கேட்டதை விட, அவனுக்குப் பெரிய அதிர்ச்சி என்ன என்றால், தன் குழந்தை என்பதே இல்லாமல், மித்ராவை விட்டுவிட்டுப் போய்விட்டதுதான்!

அவள் திட்டமிட்டிருந்த எதிர்காலத்துக்குக் குழந்தை இருப்பது சரிப்படாதாம்!

பெற்ற குழந்தையை விடுவது எப்படி முடியும் என்று சில நேரம், அவனுக்கு ஆச்சரியமாக இருக்கும்! அதாவது, எப்போதாவது ஓய்வு கிடைத்து, தன் வாழ்க்கையைப் பற்றி நினைத்துப் பார்க்கிற போது, இப்படி ஆச்சரியப்படுவான்!

இன்னும் கொஞ்சம் அவகாசம் கிடைத்தால், நாமும், பெற்று வளர்த்தவர்களை விட்டு, ஆண்டுக் கணக்கில் பிரிந்து தானே இருக்கிறோம் என்று தோன்றும்!

அந்த உறுத்தல் அதிகமாகி, இருமுறை தாய்நாட்டுக்குப் போயிருக்கிறான்!

ஒரு தடவை, மித்ராவைக் கூட, அழைத்துப் போயிருக்கிறான்!

ஆனால், போய் இரண்டே நாட்களில், இங்கிருக்கும் வேலைப் பளு பற்றி, அவனுடைய ஏஜண்ட் எலிசா போன் பண்ணுவாள்!

உடனே, விழுந்தடித்துக் கொண்டு, திரும்பி விடுவான்!

தாயாருக்கு, அது பற்றி வருத்தமும், கோபமும் இருந்தது என்பது அவனுக்குத் தெரியும்!

அதிலும், படிக்க வந்ததை விடுத்து, இன்னொன்றில் ஈடுபட்டு, திருமணம், ரத்து என்று இந்த வாழ்வுக்குப் பழகிப் போனது பற்றி, ரொம்பவே எரிச்சல் தான்!

ஆனால், இந்தப் பணம் சம்பாதிக்க, அங்கே எத்தனை பிறவி எடுக்க வேண்டியிருக்கும்?

சொன்னால், அன்னைக்குப் புரியவில்லை என்பதில், அவனுக்கும் எரிச்சல்தான்!

குழந்தை வளர்கிற முறை சரியில்லை என்று ஒரு வாதம்! சும்மா, அவனைத் திருப்பி வரவழைப்பதற்காக ஒரு சப்பைக் கட்டுதான்!

மற்றபடி, இங்கே மித்ராவுக்கு என்ன குறை?

நீச்சல் குளத்துடன் கூடிய பெரிய வீடு! அவளுக்காகத் தனி நர்சரி! அறைகள்! அவற்றில், அவளுக்குத் தேவையான அனைத்தும்! பொறுப்பான 'ஹவுஸ் கீப்பர்!'

இதற்கும் மேலாகச் சில நாட்களில், மித்ராவை, எலிசா அவள் வீட்டுக்கு அழைத்துப் போவாள். நாள் முழுவதும், அவளுடைய பிள்ளைகளோடு விளையாடிவிட்டுத் திரும்புவாள்.

அங்கே போவது என்றாலே, மித்ராவுக்குக் குஷிதான்!

இதற்கு மேலாக, ஒரு நாலு வயதுச் சிறுமிக்கு என்ன வேண்டும்?

பஞ்சடைத்த ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு, அதற்கு ஜேடி என்று பெயர் வைத்து, வீட்டில் அவள் விளையாடுவதைப் பார்க்கையில், அவனுக்கு வேடிக்கையாக இருக்கும்!

வேறு விலை உயர்ந்த ரோபோ மாடல் பொம்மைகளை வாங்கிக் கொடுத்தாலும், மித்ராவுக்கு இந்தப் பொம்மை மீதுதான் பிரியம் அதிகம்!

அதை ஒரு குழந்தை போலக் கொஞ்சுவது, அவ்வப் போது கண்ணில் படும்.

பெண் குழந்தைகளுக்கே உரித்தான தாய்மை உணர்ச்சி என்று அவன் எண்ணமிடும் போதே, அவளுடைய தாயின் நினைவு இடிக்கும்!

அவள் பெண்ணில்லையா? தாய் என்று நினைக்கக் கூடப் பிடிக்கவில்லை என்றாளே!

ஒருவேளை, தனிமை உணர்ச்சியைப் போக்கிக் கொள்ள குழந்தை, இந்தப் பொம்மையைப் பயன்படுத்துகிறாளோ என்று, இப்போது உட்கார்ந்து யோசிக்கும் போது, அவனுக்குத் தோன்றிற்று!

தனிமை உணர்வால்தான், உடனொத்த பிள்ளைகள் வீடுகளுக்கு, இப்படித் துடித்துக் கொண்டு ஓடுகிறாளோ?

இந்தப் பிறந்த நாள் பற்றி, மித்ரா பலமுறை ஆர்வமாக, அவனிடம் சொல்ல வந்தது, அப்போது அவனுக்கு நினைவு வந்தது!

வாழ்த்துக் கார்டு வாங்க வேண்டும்! பரிசு வாங்க வேண்டும்! அங்கே யாரோ நான்சி வருவாள்... மிச்சி வருவான்... இன்னும் யார் யாரோ!

"ஹவுஸ்கீப்பரிடம் சொல்லு" என்றவன், அதற்கு மேல் வெறுமனே 'ஊம்' கொட்டியபடி, சில முக்கியமான குறிப்புகளைப் படித்துக் கொண்டிருந்தது... மித்ராவின் பேச்சு நின்று போனதும், இப்போது ஞாபகம் வந்தது!

தந்தையின் கவனம் தன்னிடம் இல்லை என்று பேச்சை நிறுத்தியிருப்பாளோ? சே!

நெஞ்சு சுட்டது அவனுக்கு! அவளை விட எது முக்கியம்?

இனிக் குழந்தையுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்!

தாயின் அரவணைப்பு தான் இல்லை! தந்தையும், யாரோ போல, அவ்வப்போது எட்டிப் பார்ப்பதோடு விட்டு விட்டால் எப்படி?

கூடாது! இனிமேல், தாயுமானவனாக இருந்து, அவளைக் கவனித்துக் கொள்ள வேண்டும்!

கடவுளே! அதற்கு, அவள் நல்லபடியாகப் பிழைத்து எழ வேண்டும்!

Advertisement