» காக்கும் இமை நானுனக்கு 5

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

கிட்டத்தட்ட புவனேந்திரனின் 'உன்னத'த்தின் அளவிலேயே அமைந்திருந்த, சில பெருங்கடைகளை அவனுக்குக் காட்டிவிட்டு, ஒன்றின் உள்ளே நளினி அவனை அழைத்துச் சென்றாள்.

வாங்குவோரின் பணப்பைக்குத் தக்கபடி, என்னென்ன மாதிரித் துணி வகைகள் இருக்கின்றன என்று எடுத்துக் காட்டினாள். தைக்காத துணிகள், தைத்துத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் ஆடைகள்... எல்லா வகையிலும், விலை குறைந்தது, கூடியது எல்லாமே இருப்பதையும், சின்னச் சின்ன அலங்கார வேலைகளுக்கு ஏற்றபடி விலை கூடுவதையும் எடுத்துக் காட்டி விளக்கினாள்.

சலிக்காமல் காட்டிய விற்பனைப் பெண்ணுக்காகத் தனக்கு ஒரு சல்வார் செட்டையும் வாங்கிக் கொண்டாள்.

ஆனால், பில் போடப் போனபோது, புவனேந்திரன் பணம் கொடுக்கவும், அதைத் தடுக்க முயன்றாள்.

ஆனால், "இது உன் ஞாயிறு ஓய்வைத் தியாகம் செய்து 'உன்னத'த்துக்காகப் புரிந்திருக்கும் அதிகப்படிப் பணி. அதனால், இந்தச் செலவு கணக்கு 'நிறுவனத்'தைத்தான் சார வேண்டும்," என்று முடித்துவிட்டான் அவன்.

ஆடைகளுக்கேற்ற விதமாய், விலை குறைந்த 'காஸ்ட்யூம்' நகைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, "கூட்டம் அதிகமாகிறது, பாஸ்," என்று பாதுகாவலர்களில் ஒருவன் வந்தான்.

உடனேயே, "கிளம்புவோம்," என்று புவனேந்திரன் சொன்னது, நளினிக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது.

ஆனால், காரை நிறுத்திவிட்டு வந்த இடத்தைப் பார்த்ததும், "பார்த்தீர்களா, சார்? இந்தக் கார் நிறுத்துமிடம் நிரம்பிப் போயிற்று. உங்களது போல, டயோட்டா, பென்ஸ், ஸ்கோடா போன்ற வண்டிகள் கூட எத்தனை நிற்கின்றன, பாருங்கள். நிறுத்த இடம் இல்லாமல், இடம் தேடிச் சுற்றுகிறவை எத்தனை! இந்த மாதிரிக் கார்களில் வருகிற... உங்கள் பாஷையில், தலையில் மகுடம் வைக்காத மகாராஜாக்கள்! அவர்களும் கூடத் தங்களுக்குத் தேவைப்பட்டவைகளை வாங்க, இங்கே தானே குழுமுகிறார்கள்," என்று தன் கூற்றுக்கு, அவள் மேலும் ஆதாரம் காட்டவும், புவனேந்திரன் வாய்விட்டுச் சிரித்தான்.

"உன் கருத்தை மற்றவர்கள் மீது எப்படித் திணிக்கிறாய் என்பது, மற்றெல்லாவற்றையும் விட, மிக நன்றாகத் தெரிகிறது. பா...வம், அப்புறமாய் மாட்டிக் கொள்ளப் போகிற அந்த அப்பாவி!" என்று மீண்டும் நகைத்தான் அவன்.

எதற்காக, இதில் இவ்வளவு தீவிரமாக இருக்கிறோம் என்று, அவளுக்கே புரியவில்லைதான். அவனது தொழில். அவன் நடத்துகிறான். அல்லது, மூடுகிறான். இதில், அவளுக்கென்ன வந்தது?

என்னதான் வந்ததோ? ஆனால், புவனேந்திரன் இந்த 'உன்னத'த்தை வெற்றிகரமாக நடத்தியே ஆக வேண்டும் என்ற வேகத்தை அவளால் விட முடியவில்லை என்பது நிச்சயம்.

அவனது கேலிப் பேச்சில் முகம் சிவந்த போதும், சமாளித்துக் கொண்டு, "அப்படியானால், நான் சொன்னதை ஒத்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தமா, சார்?" என்று விடாமல் கேட்டாள் அவள்.

முறுவலோடு, காரில் ஏறிக் கொள்ளுமாறு சைகை செய்தான் அவன். "உன்னைக் கொண்டு விட்டுவிட்டுப் போகிறேன்."

"இல்லை சார். எனக்கு இங்கே கொஞ்சம் வேலை இருக்கிறது."

"வேலை? என்ன வேலை?" என்று கேட்டவன், "சொல்லக் கூடாதது என்றால், வேண்டாம்," என்று சேர்த்துச் சொன்னான்.

அவள், தன் பெரிய கைப்பையைத் திறந்து, உள்ளிருந்தவற்றை எடுத்துக் காட்டினாள்.

அலங்கார வேலைகள் செய்திருந்த பல துண்டுத் துணிகள். "சில கடைகளில் ஆர்டர் எடுத்துச் செய்து கொடுக்கிறேன், சார். 'உன்னத'த்திலும் இதைக் காட்ட வந்த போதுதான், 'விண்டோ டிஸ்ப்ளே' செய்கிறாயா என்று, இப்போதைய பணியைத் தந்தார்கள்," என்று, விவரமும் தெரிவித்தாள்.

"ஓ! அதனால் தான், குந்தன், சிக்கான் என்று அப்படி அடுக்க முடிந்ததா? குட்," என்றான் பாராட்டுதலாக. "போய், உன் வேலையைப் பார். நான் கிளம்புகிறேன்."

"ஆனால்... சார்... இன்னமும், நீங்கள் ஒரு முடிவும் சொல்லவில்லையே?"

"நிஜமாகவே, அந்த அப்பாவி ரொம்பவே பாவம்தான்!" என்று மீண்டும் முறுவலித்தான் அவன். உடனேயே "யோசிக்கிறேன், நளினி. நீ சொன்னது, என்னைக் கூட்டி வந்து இங்கே கடைகளில் காட்டியது அனைத்தையும் யோசித்துப் பார்க்கிறேன். இப்போதைக்கு என் பதில் இதுதான். ஓகே! பிறகு சந்திப்போம்," என்று விட்டுக் கிளம்பினான் புவனேந்திரன்.

ஆனால், அந்தப் 'பிறகு சந்திப்போ'மின் பொருள், மறுநாள் அலுவல் அறையில் சந்திப்பது அல்ல, அவன் ஊரை விட்டுச் சென்று, திரும்பி வந்த பின் சந்திப்பது என்று வேலைக்குச் சென்றதும் அறிய வந்தபோது, அவளுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

ஊருக்குப் போவதாகத் தன்னிடம் அவன் ஒரு வார்த்தை சொல்லவில்லையே என்று வருத்தமாகவும் இருந்தது.

ஆனால், அவளது ஏமாற்றம், வருத்தம் பற்றி யாரிடம் சொல்வது?

மறைக்க வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனாலும், சகஜமாகப் பேசிப் பழகும் பெற்றோரிடம் கூட, இதைப் பற்றிச் சொல்ல, நளினிக்குப் பிடிக்கவில்லை.

நிலைமை புரியாமல், அவளைத் தேற்றுவதாக எண்ணி, யாரேனும் ஏதேனும் சொன்னால் எரிச்சல் வரும்.

ஆனால், இரண்டு நாட்கள் கவனித்து விட்டு, "என்னடா செல்லம்?" என்று விவரம் கேட்ட தாயிடம், உண்மையைச் சொல்லாதிருக்கவும் அவளால் முடியவில்லை.

"அருமையான இடம், அம்மா! வீணாக விட்டு விடுவார்களோ என்று கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது," என்றாள் மகள்.

"அப்படி விட்டு விடுவார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. நளினிம்மா! தொழில் நடத்துகிறவன் என்று தன்னைத் தானே சொல்லியிருக்கிறார், என்கிறாய். வளாகத்தில் முடங்கிக் கிடக்கும் பணத்துக்கு லாபம் வேண்டும் என்பதுதானே, அவரது விருப்பமும். யோசி. ஞாயிறன்று கடை காட்டக் கூட்டிப் போனாய் என்று ஆயிரம் ரூபாய் சல்வார்க்குப் பணம் கொடுத்தாரே, தொடர்ந்து நடத்துகிற எண்ணம் இல்லாவிட்டால், அந்தப் பணம் அவருக்கு விரயம் தானே! அப்படி வீணாக்குவாரா? நீதானே பிடிவாதமாய் வரச் சொன்னாய், உன் பாடு என்று சும்மா இருந்திருக்க மாட்டாரா? அவரது இருப்பிடம் கோவை என்று தானே சொன்னாய்? அங்கே அவருக்கு வேலை இருந்திருக்கலாம், போயிருப்பார். எனக்கென்னவோ, நீ சொன்ன வழியில் ஒரு பிரமாதமான திட்டத்தோடு மிஸ்டர் புவனேந்திரன் திரும்பி வருவார் என்று தான் தோன்றுகிறது!" என்று சகுந்தலா நிச்சயமாகக் கூறவும், நளினிக்கும் போன உற்சாகம் திரும்பியது.

அவளுடைய அன்னை சொன்னது சரிதானே!

'உன்னத'த்தைத் தொடர்ந்து நடத்தும் எண்ணம் இல்லாவிட்டால், அந்த ஆயிரம் ரூபாய் அவனுக்கு வீண் தானே? விட்டுப் போகிறவன், அது வேறு செலவு ஏன் செய்ய வேண்டும்? தொடர்ந்து நடத்துவதானால், இது ஒரு நல்ல முதலீடு! இவ்வளவு நியாயமாக நடந்தானே என்று, அவளும் விசுவாசமாக இருப்பாள்.

"நீங்கள் சொன்னது கரெக்ட், அம்மா," என்றாள் அவள், குதூகலம் பெருக.

நளினியின் எதிர்பார்ப்பு நனவாக, விரைவிலேயே, புவனேந்திரன் திரும்பி வந்து விட்டான், ஒரே வாரத்தில்!

வந்து, தன் உடனடி வேலைகளை முடித்ததும், நளினியைக் கூப்பிட்டுப் பேசினான்.

"நீ சொன்னதை யோசித்துப் பார்த்தேன், நளினி. அதன்படி, நம் வளாகத்தின் விற்பனைப் பொருட்களை மாற்றிவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்," என்றான் அவன்.

முகம் மலர, "அப்படியானால், தொடர்ந்து நடத்தப் போகிறீர்கள்!" என்று மகிழ்ச்சியோடு கூறினாள் அவள்.

"வேறு வழி? இதை நடத்தாமல் விட்டு விட்டால், என் காதைப் பிடித்து முறுக்கி விரட்ட நீ கோவைக்கே வந்து விட மாட்டாயா? அந்தப் பயம்தான்."

முதலாளியின் காதைப் பிடித்து முறுக்குவதா?

"சா...ர்...!" என்றாள் அவள் திகைப்புடன்.

அவன் நகைத்துவிட்டு, "அந்த அளவுக்குப் போக மாட்டாய்தான். ஆனால், நீ என்னிடம் வலியுறுத்தவில்லை என்று சொல்ல முடியாதுதானே?" என்று இலகுக் குரலில் கூறியவன் தொடர்ந்து, "நீ வாதாடியதில் ஒன்று சரிதான், நளினி. தொழிலில் வெற்றி பெற ஒரு வாய்ப்பு இருக்கும் போது, அதை முயன்று பார்க்காமல் விடுவது, தப்புதான். அத்தோடு, என் இயல்புக்கு, அது பொருத்தம் இல்லாதது கூட! அது எப்படியோ நேர்ந்தது. போகட்டும். இப்போது..." என்றவாறு அவள் முகத்தைப் பார்த்தவனின் பேச்சு ஒரு கணம் நின்றது.

"ஏன் அப்படி நேர்ந்தது என்று தெரியும் போலத் தோன்றுகிறது!" என்றான் ஒரு மாதிரிக் கண்டனக் குரலில்.

புவனேந்திரனின் எரிச்சலையும் நளினியால் புரிந்து கொள்ள முடிந்தது. யாருக்குத்தான் அவர்களது வாழ்க்கை பொது விஷயமாக அலசப்படுவது பிடிக்கும்?

"'உன்னதம்' வம்பு மடம் அல்ல, சார். ஆனால், ரகசியம் என்றும் எதுவும் இராது. அதிலும், முதலாளியின் விஷயத்தில் எல்லோருக்கும் ஆர்வம் இருப்பது இயல்புதானே!" என்றாள் அவள், சமாதானமாக.

"ஆனால், என்னைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும், பேசுவதற்கு?" என்றான் அவன் கடுமையான குரலில்!

ஆனால், உடனேயே முகம் மாறி, "சரி சரி, போகட்டும். உன்னை வரச் சொன்ன காரணத்தைப் பார்ப்போம்," என்றவன், மேஜை மீது இருந்த சில ஃபைல்களைக் காட்டிப் "பிரித்துப் பார்! அங்கே கோவையில் உள்ளவை, அகில இந்திய அளவில் உள்ளவை என்று சில நிறுவனங்களில் இருந்து, அவரவர்களின் மாதிரிகளை வரவழைத்தேன். துணிகள், ரெடிமேடுகள் எல்லாமே! முதலில் ஜவுளியில் தொடங்குவோம். பிறகு, எல்லாவற்றிலும் கொண்டு வருவோம். இவற்றுள், நம் வளாகத்துக்கு ஏற்றவை எதெது என்று தேர்ந்தெடுத்துக் கொடு. உடனேயே ஆர்டர் கொடுத்து விடலாம்," என்று அவளை அவசரப்படுத்தினான்.

உற்சாகத்துடன் ஃபைல்களின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கை நின்றுவிட, "நா...னா?" என்று தயக்கத்துடன் கேட்டாள் நளினி.

"நீயேதான்! குறைந்த பட்சமாகத் துணி விஷயம் நீதான் தெரிவு செய்ய வேண்டும். உனக்கு அதில் விஷய ஞானம் இருக்கிறது. கூடவே, ஆர்வமும் இருக்கிறது!" என்றான், புவனேந்திரன்.

அவளால் முடியும் தான். கூடவே ஆசையும் இருந்தது. ஆனால்...

சற்று யோசித்துவிட்டு, "அது முடியாதே சார்," என்றாள் நளினி.

"ஏன்? ஏன் முடியாது?"

"கடைக்குப் பொருள் வாங்குவது என் வேலை அல்ல, சார்!"

"உன்.. ஓ, அதிகப்படி வேலை என்று பார்க்கிறாயா? அதற்குத் தனியாக..."

"ஐயோ, அப்படியில்லை சார்," என்று அவன் பேச்சில் குறுக்கிட்டுச் சொன்னாள் அவள். தொடர்ந்து, "இங்கே கிட்டத்தட்ட கடைசியாக வேலைக்குச் சேர்ந்தவள் நான். பொருட்களைத் தேர்வு செய்து வாங்குவதை நிர்வாகிகளும், தலைமை விற்பனைப் பொறுப்பாளர்களும் செய்து வருகிறார்கள். இதில் என் தலையீட்டை அவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்!" என்று விளக்கினாள்.

"சொல்வது நான். செய்வது நீ. இதில் என்னிடம் ஊதியம் வாங்கிக் கொண்டு பணிபுரியும் அவர்கள் என்ன ஒத்துக் கொள்வதும் ஒத்துக் கொள்ளாததும்?" என்றான் அவன் சற்று அழுத்தமான குரலில்.

"அது சரி, சார். நீங்கள் முதலாளியாய்ச் சொல்லிவிட்டுக் கிளம்பி விடுவீர்கள். அப்புறம், நாள் பூராவும் இங்கே அவர்களோடு கூட இருந்து பணிபுரியப் போவது நான் அல்லவா? சும்மாவே, இது விஷயமாக என் மீது ஏற்கனவே கோபம் இருக்கிறது. இதைச் செய்தேன் என்றால், அப்புறம் பெரும் பிரச்சனையாகி விடும். வேண்டாம் சார்," என்றாள் அவள் கவலையுடன்.


"அப்படியே பார்த்தாலும், இந்த அறையில் வைத்து நீ தேர்ந்தெடுப்பது யாருக்குத் தெரியப் போகிறது?"

"இரண்டும் இரண்டும் நாலு சார். இங்கே நான் வந்து போனதும், நீங்கள் ஆர்டர் கொடுத்தால், தெரியாதா? இப்போதுதானே சார், பேசினோம். உங்கள் கதையை நீங்களோ, உங்கள் பாட்டியோ சொல்லியா எல்லோருக்கும் தெரிந்தது?"

"என் கதை. என்னைப் பற்றி யாருக்கு என்ன தெரியும்? என் கதை என்று எல்லோரும் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?" என்று கசந்த குரலில், ஒரு கரகரப்புடன் கேட்டான் புவனேந்திரன்.

"நடந்ததைத்தான்! உங்கள் அம்மாவை மணந்ததற்காக, உங்கள் அப்பாவும் சேர்ந்து வீட்டை விட்டுப் போனது. உங்கள் பெற்றோர் இருவரும் விபத்தில்... விபத்தில் மறைந்தது. உங்கள் பாட்டி அழைத்த போது, நீங்கள் வர மறுத்தது. கடைசியாக மரணப் படுக்கையில், உங்களிடம் சொத்துக்களை ஒப்படைத்துவிட்டுப் பாட்டி போனது. இப்படி எல்லாமே, எல்லோருக்குமே தெரியும் சார்!"

"ஓ..." என்று சற்று நேரம் பேசாதிருந்தான் அவன்.

பிரச்சனையின் தீவிரத்தில், அவன் தன்னை மறந்து விட்டானோ என்று கூட நளினிக்குத் தோன்றியது. "சார்..." என்று மெல்ல அழைத்து, "உங்கள் விருப்பத்தைச் சொன்னால், வழக்கமாகச் செய்கிறவர்களே, உங்கள் சொல்படியே தேர்ந்தெடுக்கக் கூடும், சார்," என்றாள் அவள் மெதுவாக.

மேஜையிலிருந்து பார்வையை உயர்த்தி அவளைப் பார்த்தான் புவனேந்திரன்.

தலையை உலுக்கிக் கொண்டு, "இல்லை, அது சரிவராது. சொல்படி என்பது வேறு. விருப்பம் போல என்பது வேறு. அத்தோடு, நீ குறிப்பிட்டவர்கள் எல்லோருமே, குறைந்த பட்சமாக ஒரு தலைமுறை மூத்தவர்கள். இரண்டு தலைமுறை மூத்த பாட்டிக்கு ஏற்ப, ஒரு குறிப்பிட்ட கருத்தில், ஆண்டுக் கணக்கில் ஊறிப் போனவர்கள். அதைத் தாண்டி வந்து, அவர்கள் நம் வழியில் யோசிப்பது கடினம். மேலும் இந்த விஷயத்தில், எனக்கு உன் மீதுதான் நம்பிக்கை. இந்த அலுவலகம் இல்லை என்றால், வேறு எங்கேயேனும்... என் இடத்துக்கு உன்னை அழைத்துப் போவதும் பயன் இராது. அங்கே உள்ள பணியாட்களுக்கு, இங்கே தொடர்பு இருக்கிறது. காபி ஷாப் மாதிரி இடங்களில் உட்கார்ந்து, அரை மணி நேரத்தில் முடிக்கிற வேலையும், இது அல்ல. என்ன செய்வது என்று உனக்கு ஏதாவது தோன்றுகிறதா?" என்று கேட்டான் அவன்.

இந்தத் திட்டத்தை ஏற்றால், பல லட்சங்கள் முதலீடு போட வேண்டிய புவனேந்திரனுக்குத் தன் மீது இவ்வளவு நம்பிக்கை இருப்பது, நளினிக்குப் பெருமையாக இருந்தது. அத்தோடு, இங்கே வேலை செய்யத் தொடங்கியதில் இருந்து, அவள் வெகுவாக முயன்று, பயனில்லை என்று ஆற்றாமையோடு விட்ட ஒன்று நடக்கப் போகிறது என்கிற மகிழ்ச்சியும் நிறையவே இருந்தது.

இவ்வளவுக்கு வந்து, உப்புப் பெறாத சின்னக் காரணங்களால் கெட்டு விடக் கூடாதே.

எனவே அவசரமாக யோசித்து, "சார், உங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்றால், நீங்கள் எங்கள் வீட்டுக்கு வர முடியுமா? ரொம்பவும் முன்னாலேயே கட்டப்பட்ட ஃப்ளாட் என்பதால், வீட்டுக்கு முன்புறம் வராந்த விசாலமாக இருக்கும். அங்கேயே, பிரம்பு சோஃபா செட்டெல்லாம் போட்டிருப்போம். அங்கே, உட்கார்ந்து வேலை செய்யலாம். நானே, அங்கே அமர்ந்துதான், என் துணி வேலைகளைச் செய்வது. எங்கள் வீடு, கடைசி ஃப்ளாட் என்பதால், வேறு யாரும் போய் வந்து இடையூறாகவும் இருக்காது. என் அம்மா, அப்பா, தங்கைதான். தங்கை பிளஸ் டூ. அவள் பாடத்திலேயே மூழ்கிக் கிடப்பாள். அம்மா உதவியாகவே இருப்பார்கள்," என்று வேகமாகச் சொன்னாள் அவள்.

"அதாவது, வீட்டுக்கு வெளியிலேயே நிறுத்துகிறாய்," என்று சிரித்த போதும், "இது நல்ல யோசனையாகத் தெரிகிறது. எதற்கும் உன் தந்தை வீட்டில் இருக்கும் நேரம் சொல்லு. நான் வந்து, அவரிடம் நேரில் அனுமதி கேட்டு, அதன் பிறகு வேலையைத் தொடங்குவோம்," என்றான் புவனேந்திரன்.

அவ்வளவு பெரிய மனிதன், முதலாளி என்ற பந்தா காட்டாமல் பெற்றவரின் உரிமையை மதிக்கிறான் என்பதே, சுதர்சனத்துக்கு அவனிடம் ஓர் ஈடுபாட்டை ஏற்படுத்த, அவரும் சம்மதித்தார்.

இப்படித்தான் புவனேந்திரன் நளினியின் வீட்டுக்கு வந்தது.

அவன் வருமுன், அவனுடைய பாதுகாவலர்கள் வந்து, வீட்டைச் சுற்றிப் பார்த்தது, நளினி எதிர்பார்த்ததுதான் என்றாலும், அது பற்றித் தாயிடம் விளக்கம் சொல்லுகையில், அவளுக்குக் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது.

ஆனால், அவன் இனிமையாகப் பேசித் தந்தையிடம் அனுமதி பெற்ற விதமும், தொடர்ந்து அவனோடு சேர்ந்து செய்த வேலையும், இடையிடையே கலகலப்பாக நடந்த பேச்சும் அவள் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கவே, இந்த எரிச்சல் மறந்து போயிற்று.

புவனேந்திரன் வாரா வாரம் சென்னைக்கு வர, வேலையும் வெகு முனைப்பாக நடக்க, நளினியும் அவனது வரவை மிகவும் ஆவலோடும் ஆனந்தத்தோடும் எதிர்பார்க்கலானாள்.

மூன்று வாரங்கள் இப்படிக் கழிய, நாலாவது வாரம், புவனேந்திரன் சென்னைக்கு வந்தபோது, மாலையில் அவனது வரவுக்காக அவள் வீட்டில் காத்திருக்கையில், வாயிலில் வந்து நின்ற சிறு காரிலிருந்து புதியவன் ஒருவன் இறங்கி வந்து, அவளிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான்.

கடிதம் கொண்டு வரும் கோகுல், துணிகள் விஷயத்தில் வல்லுனன் என்றும், கடைக்கு வேண்டியவற்றைத் தேர்ந்தெடுப்பதில், தனக்கு அளித்த ஒத்துழைப்பை, நளினி கோகுலுக்கும் அளிப்பாள் என்று நம்புவதாகவும், அதில் புவனேந்திரன் எழுதியிருந்தான்.

புவனேந்திரன் தன் முகத்தில் ஓங்கி அறைந்தாற் போல உணர்ந்தாள் நளினி.

ஏதோ ஒரு வகையில், புவனேந்திரன் தன்னை அவமதித்து விலக்கி விட்டாற்போல உணர்ந்து, நளினி தவிக்கக் காரணம் இருந்தது.

அவன் வந்த அந்த மூன்று வாரங்களில், முதல் வாரம் மட்டும்தான், அவன் வார நாட்களில் மட்டுமாக வந்தது. மற்ற இரு முறையும், வியாழன் அல்லது வெள்ளியன்று வந்து, ஞாயிறு முடியச் சென்னையிலேயே இருந்துவிட்டுப் போனான்.

வார நாட்களில், மதிய உணவு இடைவேளைகளில், வேலை செய்தனர். ஆனால், ஞாயிற்றுக் கிழமைகளில் காலை தொடங்கி, மாலை வரை வேலை நடந்தது.

சின்ன வயதாகத் தோன்றுகிறானே, மெய்யாகவே, வேலை தான் இவனது நோக்கமா என்று சற்றுக் கவலைப்பட்ட சகுந்தலா கூட, வேலை நடந்த வேகத்தைப் பார்த்து அதிசயித்துப் போனாள்.

இடையிடையே, காபி, குளிர் பானம் ஏதாவது கொணர்ந்து வைப்பாள். முறுக்கு, தட்டை என்று ஒரு சிற்றுண்டி அடுத்து வந்தது.

வெறும் நன்றி கூறி உண்டுவிட்டுப் போகாமல், புவனேந்திரன் சகுந்தலாவிடமும் அபிப்பிராயம் கேட்பான்.

கூடவே ஒரு பாராட்டும் இருக்கும்.

"'உப்பிட்டவரை உள்ளளவும் நினை!' என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இந்த மாதிரி ஒரு சிறு உப்புக்கல் கூட அதிகமோ, குறைவோ இல்லாமல், இப்படி ருசியாகச் செய்து தந்தால், இந்த உயிர் இன்னொரு பிறவி எடுக்கும் போது கூட, இந்தச் சுவையை மறக்காது, ஆன்ட்டி!" என்று அவன் கூறுகையில், சகுந்தலாவுக்கு உச்சி குளிர்ந்து போகும்.

"இப்போதெல்லாம் உப்புத் தூள் தான். உப்புக் கல்லே கிடையாது," என்று மடக்கிய போதும், அந்த 'உப்புக் கல்' என்ற வார்த்தையில் நளினியின் மனம் இதமாகக் குறுகுறுக்கும்.

உப்புக்கல் என்ற வார்த்தையை வேண்டும் என்றுதான், புவனன் சொன்னானா? சொல்லும்போது, லேசாக அவளைப் பார்த்தானா?

ஞாயிற்றுக் கிழமைகளில், சேர்ந்து சாப்பிட அழைத்த போது, மறுக்காமல் அவர்களோடு அமர்ந்து ரசித்து உண்டான். அடுத்த வேளைக்கு பீட்சா, சான்ட்விச் என்று எல்லோருக்குமாக வரவழைத்தான்.

"ஐயோ, நான் பிளஸ் டூ படிக்கிறேனாக்கும்! எனக்கெல்லாம் யாரிடமும் பேச நேரமே கிடையாது!" என்று புருவத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அலையும் மஞ்சரியைக் கூட, உட்கார்ந்து இரண்டு வார்த்தை பேச வைத்தான்.

மொத்தத்தில் முதுகை ஒடிக்கிற அளவுக்கு வேலையும் நடந்தது. கூடவே தன் வீட்டாரோடு அவன் இணைந்து பழகிய விதத்தில், நளினிக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

கடைசித் தடவை புவனேந்திரன் வந்த போது அந்த மகிழ்ச்சியை அவள் முகத்தில் அதிகமாகக் காட்டி விட்டாளோ?

காட்டி விட்டாளோ என்ன? காட்டத்தான் செய்தாள். ஒருவரின் வரவு சந்தோஷமாக இருக்கும் போது, அதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

அதிலும், அந்த நபர் அவள் வீட்டு விருந்தாளியாக வரும்போது?

அவள் சிரித்துக் கொண்டே, "லட்சம் நல்வரவு!" என்ற போது, புவனேந்திரன் பதிலுக்குச் சிரித்தபடிதான் உள்ளே வந்ததாக, அவள் அப்போது நினைத்தாள்.

ஆனால், சற்றுத் திகைத்து நின்று விட்டு, அதன் பின்னர் சமாளித்துச் சிரித்தானோ என்று இப்போது யோசித்துப் பார்க்கையில் அவளுக்குத் தோன்றியது.

ஏன்? ஒருவர் நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்பதில் கூடத் திகைப்பதற்கு என்ன இருக்கிறது? அவள் ஒன்றும் அவனுடைய விரோதி இல்லையே.

மனம் எரிமலையின் மடியாய்க் குழம்பிக் குமுறிய போதும், பெற்ற தாயிடம் கூட, அவளால் அதைக் காட்டிக் கொள்ள முடியவில்லை.

"புவனேந்திரன் சாருக்கு வேறு நிறைய வேலை இருக்கிறதாம்மா! அதனால், இந்த வேலையை இவரிடம் ஒப்படைத்து இருக்கிறாராம்," என்று அறிமுகம் வேறு செய்து வைக்க வேண்டியிருந்தது.

அவளை விட ஓரிரு ஆண்டுகளே மூத்தவனான கோகுல், உடைத் தயாரிப்புக் கலையில் பெரும் பட்டங்கள் வாங்கியிருந்தான். புவனேந்திரன் எழுதியிருந்த மாதிரி, வல்லுனனாகவும் இருந்தான்.

அத்தோடு, முன்னேறும் ஆர்வமும் இருந்ததால், அவனோடு வேலை செய்வது, நளினிக்குமே, அறிவுப் பூர்வமாக ஆக்கம் அளிப்பதாகத்தான் இருந்தது. சொல்லப் போனால், எந்தெந்தத் துணி வகைகளை எந்தெந்த மாதிரித் தைத்து அணிந்தால், தோற்றம் சிறப்பாக இருக்கும் என்பதெல்லாம், புவனேந்திரனை விடவும், கோகுல் அதிகமாகவே தெரிந்து வைத்திருந்தான்!

அவளை விடவுமே!

கோகுலோடு வேலை செய்யத் தொடங்கிச் சிறிது நேரத்திலேயே நளினி இதைப் புரிந்து கொண்டாள். எனவே, மெய்யாகவே, செய்யும் பணி சிறப்பாக இருக்க வேண்டும் எனும் ஒரே காரணத்துக்காகவே, புவனேந்திரன் இந்தக் கோகுலை அனுப்பியிருக்கிறான் என்று, நளினி தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.

ஆனால், இது பற்றி 'உன்னதம்' வளாகத்தில், புவனேந்திரன் தன்னை அழைத்துச் சொல்லுவான் என்று எதிர்பார்த்து மாலையில் வேலைக்குச் சென்றவள், ரொம்பவே ஏமாந்து போனாள்.

அவனாக அவளை அழையாதது மட்டுமின்றி, அவளாக முயன்ற போதும், புவனேந்திரனை அவளால் சந்திக்க முடியவில்லை.

மறுநாளும், அதற்கு மறுநாளும் என்று அந்த முறை அவன் அங்கிருந்த அத்தனை நாட்களும் இதுவே தொடரவும், புவனேந்திரன் தன்னை வேண்டும் என்றே ஒதுக்குகிறான் என்று அவளுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து போயிற்று.

ஏன் ஏன் என்று பல்லாயிரம் முறை யோசித்து மனதை புண்ணாக்கிக் கொண்டாளே தவிர, அந்த ஒதுக்கத்தின் காரணத்தை அவளால் ஊகிக்கவே முடியவில்லை.

போகிறான் என்று அலட்சியப்படுத்தவும் முடியாமல் மிகவும் வேதனையாக இருந்தது.

அவ்வளவு தூரம் சகஜமாக, குடும்பத்துடனேயே சேர்ந்து அமர்ந்து உண்டு, பேசிச் சிரித்துப் பழகிவிட்டு, இப்போது பெரிய முதலாளியாக, ஒரு கடைநிலைப் பணியாளைப் போலப் புவனேந்திரன் தன்னை நடத்துவதை அவளால் தாங்க முடியவில்லை.

ஆனால், அவளது வீட்டுக்குப் புவனேந்திரன் வந்து, 'ஆன்ட்டி, அங்கிள்!' என்று அவளுடைய பெற்றோருடன் ஓர் உறவினனைப் போலப் பழகியது எல்லாம், அவனது வேலை நன்கு நடக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவா?

அவனது இடத்துக்குத் தகுதியுள்ள இன்னோர் ஆள் கிடைத்ததும், அப்படியே ஒதுங்கிக் கொண்டு விடுவானா?

எப்படி முடியும்?

அவனும் சந்தோஷமாகத்தானே பேசிச் சிரித்தான்?

அந்த சந்தோஷத்துக்காக, அவளைப் போல, அவனது மனமும் ஏங்காதா?

ஆனால், அவனுக்கெல்லாம் மனம் ஒன்று இருந்தால் தானே, ஏங்குவதற்கு?

முதலாளி அல்லவா? கொஞ்சம் சிரித்துப் பேசுவதாகக் காட்டிக் கொண்டாலே, முழு மூச்சுடன் வேலை செய்வாள் என்று கணக்கிட்டிருக்கிறான்.

அவன் எதிர்பார்த்தது போலவே, இரவு தூக்கத்தில் கூட, வண்ணங்கள், வடிவமைப்புகள், துணி வகைகளைப் பற்றியே யோசித்து யோசித்து வடிவமைத்தது அவளது முட்டாள்தனமே தவிர, அதில் அவனைக் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது?

இந்தக் குமுறலின் ஊடே, நளினிக்குக் கோபமும் வந்தது.

அவளது வீடு என்ன, 'உன்னத'த்தின் கிளையா? அல்லது, புவனேந்திரன் அதற்குத் தனியாக வாடகை கொடுக்கிறானா? என்ன உரிமையில், அவளது வீட்டில் இந்த வேலையைச் செய்வது?

வேறு இடம் சரியாக இல்லையே என்று, ஏதோ, அவளாகத்தான் ஓர் இளக்கத்தில் இந்த ஐடியா சொன்னாள். ஆனால், அதுதான் சாக்கு என்று, அதையே நிரந்தரமாக்கி விடுவதா?

அடுத்த முறை அவன் வரும்போது, இந்த விஷயம் பற்றிப் புவனேந்திரனிடம் காரசாரமாக இல்லாவிட்டாலும், கறாராகப் பேசிவிட வேண்டும் என்று நளினி முடிவெடுத்த போது, ஒரு நாள் காலையில், நளினி வேலைக்குக் கிளம்பு முன்பாக கூரியரில் அவளுக்கு ஒரு கடிதமும், அவளுடைய தந்தைக்கு ஒரு பெரிய பார்சலும் வந்தன.

இரண்டையுமே அனுப்பியது புவனேந்திரன் தான்.

பெரிய பார்சலை அவசரமாகப் பிரித்துப் பார்த்த சகுந்தலாவும், சுதர்சனமும் வியந்து நின்றனர்.

சென்னை 'பூம்புகா'ரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்களில், ஒரு பெரிய சூரியச் சக்கரத்தைப் பார்த்து ஆசைப்பட்டு விலையைக் கேட்டுவிட்டு, மிரண்டு போய் ஓடியே வந்து விட்டதாக, ஒரு தரம் நகைச்சுவை ததும்ப, அவர்கள் இருவரும் புவனேந்திரனிடம் விவரித்திருந்தனர்.

அதே சூரியச் சக்கரம் தான் பார்சலுக்குள் இருந்தது. கூடவே ஒரு சிறு கடிதமும்.

'உன்னத'த்தின் சரித்திரத்தில் ஒரு முக்கிய மாறுதலைச் செய்யப் பல்வேறு உதவிகளை அன்போடு செய்ததற்காகத் தனது நன்றியை இந்தச் சிறு அடையாளத்தின் மூலமாகத் தெரிவித்துக் கொள்வதாகப் புவனேந்திரன் கடிதத்தில் எழுதியிருந்தான்.

அவர்கள் செய்த உதவிக்கு, நேரில் வந்து நன்றி தெரிவிப்பதுதான் முறையாகும். ஆனால், கடை வளாகத்தில் சில மாற்றங்கள் செய்வதால், வேலை மிகுதி. அதனால் நேரில் வர முடியவில்லை என்று, ஒரு காரணத்தையும், அந்தப் பெரிய தலைமுறை ஏற்கும் விதமாக அவன் பதவிசாகவே எழுதியிருந்தான்.

சகுந்தலாவுக்கு மனம் உருகிப் போயிற்று.

"அருமையான மனிதர். இப்படி ஒரு பாஸ் கிடைத்தது, உன் அதிருஷ்டம்," என்றார் தந்தையும்.

"உனக்கு என்ன எழுதியிருக்கிறார்? இதே போலவா?" என்று இருவரும் கேட்க, நளினி தனக்கு வந்த கடிதத்தை நீட்டினாள்.

அவளுக்கும் கடிதத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. சில விவரங்களும்.

மாற்றம் குறித்து 'உன்னத'த்துடைய நிர்வாகிகளுக்கு அறிவித்து விட்டதாலும், அலுவலகத்திலேயே இந்தத் தேர்ந்தெடுக்கும் வேலைகளைச் செய்யத் தனியிடம் ஒன்று ஒதுக்கியிருப்பதாலும், கோகுலும், நளினியும் அங்கேயே சேர்ந்தமர்ந்து, இதே பணியை வெளிப்படையாகச் செய்யலாம் என்று தகவல் இருந்தது.

இந்த வேலை மாற்றம், நளினிக்கு ஒரு பதவி உயர்வாகக் கொடுக்கப்பட்டிருந்தது.

கூடவே, அதுவரையிலும் அவள் செய்த அதிகப்படி வேலைக்காக, ஒரு கணிசமான தொகைக்கான ஒரு காசோலையும்.

பதவி உயர்வு, பரிசு என்று பெற்றவர்கள் மகிழ்ச்சியில் பூரிக்க, எதையும் ஒத்துக் கொள்ளப் பிடிக்காமல், அதே சமயம் எதையும் வெளியே காட்டிக் கொள்ளவும் முடியாமல், நளினி உள்ளூரக் குமுறினாள்.

காட்டிக் கொள்வது இருக்கட்டும், அவளுக்கே, தான் என்ன விரும்புகிறோம் என்று தெளிவாகப் புரியாத நிலை.

பணம் கொடுத்து, ஒரு வல்லுனனின் உழைப்பை வாங்கக் கூடிய நிலையில் உள்ளவன், அவனது மற்ற வேலைகளுக்கு இடையில், இதையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டே இருப்பான் என்று எதிர்பார்க்க முடியாதுதான்.

ஆனால், புவனேந்திரன் இப்படித் திடுமென வெட்டிக் கொண்டது, அவளுக்குப் பிடிக்கவில்லை.

அத்தோடு, அவள் செய்த உதவிக்கு அவன் விலை போட்டுப் பணம் அனுப்பியது, என்னவோ, அவளை அவமானப்படுத்தி விட்டது போல, அவளுக்கு ஆத்திர மூட்டியது.

அவள் என்ன, பணத்துக்காகவா இந்த அதிகப்படி வேலையைச் செய்தாள்?

எண்ணப் போக்கில் தொடர்ந்து, 'பின்னே எதற்காகச் செய்தாள்' என்ற கேள்வி தோன்றவும், அவளுக்கே ஒன்றும் புரியாது போயிற்று.

அவனிடம் ஊதியம் வாங்கிக் கொண்டு பணிபுரிகிறவள், அவள் செய்த அதிகப்படி வேலை, பணம், பதவி உயர்வு, இதற்காகவெல்லாம் இல்லை என்றால் வேறு எதற்கு?

என்ன யோசித்தும் அவளுக்குப் புரியவில்லை.

இந்தக் குழப்ப நிலையிலேயே, மேலும் இரு மாதங்கள் கடந்து போயின.

இந்த அறுபது நாட்களுமே, புவனேந்திரனை அவள் பார்க்கவே இல்லை.

வளாகத்துக்கு அவன் நேரில் வந்ததாகவும் தெரியவில்லை.

ஆனால், அவன் நேரில் வராவிட்டாலும், 'உன்னத'த்தில் பல மாற்றங்கள் நிகழலாயின.

ஜவுளிப் பகுதியைப் போலவே, வளாகத்தின் எல்லாத் துறைகளிலுமே, இந்த மாற்றம் அமலாக்கம் செய்யப்பட்டது.

மதியம் கடையை மூடுவது நிறுத்தப்பட்டது.

இந்த மாற்றங்களைத் தாங்கிய விளம்பரங்கள், பெரிய பத்திரிகைகளில் வெளியாயின.

இந்த மாற்றங்கள் பிடிக்காதவர்களும், அதுபற்றி, உரக்கப் பேசப் பயப்பட்டார்கள். சின்னப் பயல் என்று எண்ணப்பட்டவன், எங்கேயோ இருந்து கொண்டு, இங்கே இப்படி ஆட்டி வைக்கிறானே, இவனது காதுகள் எங்கெங்கே இருக்கின்றனவோ என்று அஞ்சினார்கள்.

அதற்கேற்ப, புதிதாகப் பலர் வேலைக்குச் சேர்க்கப்பட்டார்கள்.

அவர்கள் அனைவருமே, புவனேந்திரனால், நேரடியாக வேலையில் அமர்த்தப்பட்டார்கள். கோகுலைப் போல!

பூவலிங்கத்தின் தலைமையில் மேலும் பலர் சேர்க்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்ததால், அது மிகவும் அவசியமாகவும் ஆயிற்று.

ஒரு காலத்தில் நளினி விரும்பிய விதமாகத்தான், வளாகக் கடைகள் 'ஜே ஜே' என்று நடந்தன. ஆனால், அதைப் பார்த்து மகிழ முடியாமல், அவளது மனதுதான் ஏனோ வெறுமையாக இருந்தது.

நாளுக்கு நாள் அந்த வெறுமை கூடிற்றே தவிர, ஒரு சிறிதும் குறைவதாக இல்லை.

எரிச்சலுற்றவளாய், அன்று இரண்டு மணி நேரம் விடுப்பு எடுத்துக் கொண்டு, நளினி 'உன்னத'த்தை விட்டுச் சீக்கிரமே கிளம்பி விட்டாள்.

ஆனால், வீட்டை நெருங்குகையில் அதுவும் பிடிக்கவில்லை.

ஏன் சீக்கிரம் வந்தாய்? உடம்புக்கு என்ன? குளிரா? காய்ச்சலா? என்ன என்று அன்னை ஆயிரம் கேள்விகளால், அவளைத் திணறடித்து விடுவாள்.

வீடு போகிற வழியில், சற்று நேரம் கடைகளில் சுற்றி விட்டு, மெல்ல வீட்டுக்கு நடந்து சென்றாள்.

வீடு இருக்கும் தெருவுக்குள் புகும்போது, அவளது வீட்டுப் பகுதியில் இருந்து, ஒரு பெரிய நீளக் கார், தெருவின் மறுமுனையில் வளைந்து திரும்பியது.

இது புவனேந்திரனின் கார் போலத் தெரிகிறதே, வீட்டுக்கு வந்திருப்பானோ? அவன் வருகிற நேரம் அவள் வீட்டில் இல்லாமல் போய் விட்டாளே!

பரபரப்போடு, ஓட்டமும் நடையுமாக, அவள் வீட்டுக்கு விரைந்தாள். அங்கே அவளுக்கு மேலாகப் படபடப்புடன், அவளுடைய தாயார் இருந்தாள்.

தந்தையும் கூட!

மகளைப் பார்த்ததும், சற்றே அதிர்ந்தாற் போல, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

Advertisement