» அடி

தமிழ்ப் பாக்களின் இலக்கணத்தைக் கூறும் யாப்பியல் நூல்கள், பாக்களின் உறுப்புக்களாக, எழுத்து, அசை, சீர், அடி என்பவற்றைக் குறிப்பிடுகின்றன. எழுத்துக்கள் சேர்ந்து அசையும், அசைகள் சேர்ந்து சீரும், சீர்கள் சேர்ந்து அடியும் உருவாகின்றன

அடிகளின் உருவாக்கம்

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா"

மேலேயுள்ள பாடலிலே ஒவ்வொரு வரியும் ஒரு அடியாகும். முதல் அடியானது 1. பாலும், 2. தெளிதேனும், 3. பாகும், 4. பருப்புமிவை என நான்கு பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் சீர் என அழைக்கப்படுகின்றது. இப்பாடலிலே முதல் மூன்று அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீர்களைக் கொண்டு அமைந்துள்ளன. நான்காவது அடி மூன்று சீர்களால் அமைந்துள்ளது. பொதுவாக பாடல்களின் அடிகளில் இரண்டு சீர்கள் முதல் பதினாறு சீர்கள் வரை காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு வெவ்வேறு எண்ணிக்கையான சீர்களைக் கொண்டு அமைந்த அடிகள் வெவ்வேறு பெயர்களினால் குறிப்பிடப்படுகின்றன.

1. குறளடி - இரண்டு சீர்கள் கொண்டது.
2. சிந்தடி - மூன்று சீர்கள் கொண்டது.
3. அளவடி - நான்கு சீர்கள் கொண்டது.
4. நெடிலடி - ஐந்து சீர்கள் கொண்டது
5. கழி நெடிலடி - ஆறு, ஏழு அல்லது எட்டு சீர்களைக் கொண்டது.
6. இடையாகு கழி நெடிலடி - ஒன்பது அல்லது பத்து சீர்களைக் கொண்டது.
7. கடையாகு கழி நெடிலடி - 11 முதல் 16 வரையான எண்ணிக்கைகளில் சீர்களைக் கொண்டது.

Advertisement