» நெய்தல்
இடம் - கடலும் கடல் சார்ந்த இடமும்
ஒழுக்கம் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
தெண்கடற் சேர்ப்பன் பிரியப் புலம்(பு) அடைந்(து)
ஒள்தடங்கண் துஞ்சற்க ஒள்ளிழாய் - நண்படைந்த
சேவலும் தன்அருகில் சேக்குமால் என்கொலோ
பூந்தலை அன்றில் புலம்பு
கொடுந்தாள் அலவ! குறையாம் இரப்பேம்
ஒடுங்கா ஒலிகடல் சேர்ப்பன் - நெடுந்தேர்
கடந்த வழியைஎம் கண்ணாரக் காண
நடந்து சிதையாதி நீ
பொரிப்புறப் பல்லிச் சினையீன்ற புன்னை
வரிப்புற வார்மணல்மேல் ஏறித் - தெரிப்புறத்
தாழ்கடற் தண்சேர்ப்பன் தார்அகலம் நல்குமேல்
ஆழியால் காணாமோ யாம்
கொண்கன் பிரிந்த குளிர்பூம் பொழில்நோக்கி
உண்கண் சிவப்ப அழுதேன் ஒளிமுகம்
கண்டன்னை எவ்வம்யா தென்னக் கடல்வந்தென்
வண்டல் சிதைத்ததென் றேன்
ஈர்ந்தண் பொழிலுள் இருங்கழித் தண்சேர்ப்பன்
சேர்ந்தென் செறிவளைத்தோள் பற்றித் தெளித்தமை
மாந்தளிர் மேனியாய் ! மன்ற விடுவனவோ
பூந்தண் பொழிலுள் குருகு
ஓதம் தொகுத்த ஒலிகடல் தண்முத்தம்
பேதை மடவார்தம் வண்டல் விளக்கயரும்
கானலம் சேர்ப்ப! தகுவதோ என்தோழி
தோள்நலம் தோற்பித்தல் நீ
பெருங்கடல் உள்கலங்க நுண்வலை வீசி
ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழுமீன்
உணங்கல்புள் ஒப்பும் ஒளியிழை மாதர்
அணங்காகும் ஆற்ற எமக்கு
எக்கர் இடுமணல்மேல் ஓதம் தரவந்த
நித்திலம் நின்றிமைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப
மிக்க மிகுபுகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார்
ஒற்கம் கடைப்பிடியா தார்
கொடுமுள் மடல்தாழைக் கூம்பவிழ்ந்த ஒண்பூ
இடையுள் இழுதொப்பத் தோன்றிப் -புடையெலாம்
தெய்வம் கமழும் தெளிகடல் தண்சேர்ப்பன்
செய்தான் தெளியாக் குறி
அணிகடல் தண்சேர்ப்பன் தேர்ப்பரிமாப் பூண்ட
மணிஅரவம் என்றெழுந்து போந்தேன் - கனிவிரும்பும்
புள்ளரவம் கேட்டுப் பெயர்ந்தேன் ஒளியிழாய்
உள்ளுருகு நெஞ்சினேன் ஆய்